Skip to content
1 கொரிந்தியர் 4:1-13

1 கொரிந்தியர் 4:1-13

1
எனவே, மக்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், இறைவனின் இரகசியமான உண்மைகளைப் பிரசித்தப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்கள் என்றும் எண்ணவேண்டும்.
2
எப்பொழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர், உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்.
3
உங்களாலேயாவது அல்லது எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது, நான் நியாயந்தீர்க்கப்படுவதை அற்பமாகவே எண்ணுகிறேன்; நானும் என்னைக்குறித்து நியாயத்தீர்ப்புச் செய்யவில்லை.
4
என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயந்தீர்க்கிறவர்.
5
எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்னே, நீங்கள் யாரையும் நியாயந்தீர்க்கவேண்டாம்; கர்த்தர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார். மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களையும் வெளியரங்கப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான்.
6
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்கள் நன்மையைக் கருத்தில்கொண்டே, என்னையும் அப்பொல்லோவையும் ஒரு எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டு, இவற்றை எழுதியிருக்கிறேன். இதனால், “எழுதியிருக்கிறதற்குமேல் போகவேண்டாம்” என்பதன் கருத்தை, நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனைப்பற்றி இன்னொருவர் இகழமாட்டீர்கள்.
7
ஏனெனில், மற்ற எவரையும்விட உங்களை வித்தியாசப்படுத்துபவர் யார்? நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கிறது? நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தால், அவற்றை ஒரு வரமாகப் பெற்றீர்கள் என்று எண்ணாமல், எப்படி பெருமைபாராட்டுகிறீர்கள்?
8
உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஏற்கெனவே நீங்கள் பெற்றுக்கொண்டீர்களோ! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்களோ! நீங்கள் எங்களை விட்டுவிட்டு அரசர்களாகிவிட்டீர்களோ! ஆனால் நாங்களோ அப்படியல்ல. நீங்கள் உண்மையாகவே அரசர்களாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அப்பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே.
9
ஆனால் எனக்கோ, கொலைக்களத்திற்கு சாகும்படி கொண்டுசெல்லப்படுகிறவர்களின் வரிசையின் இறுதியில், அப்போஸ்தலர்களாகிய எங்களையும் இறைவன் நிறுத்தி, ஒரு காட்சிப் பொருளானோம் என காணப்படப்பண்ணினர். நாங்கள் முழு உலகத்திற்கும், இறைத்தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வேடிக்கையானோம்.
10
கிறிஸ்துவுக்காகவே நாங்கள் மூடர்களாயிருக்கிறோம். ஆனால், நீங்களோ கிறிஸ்துவில் எவ்வளவு ஞானமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்! நாங்கள் பெலவீனர், நீங்களோ பெலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்!
11
இந்த நேரத்திலும், நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பழைய உடைகளையே உடுத்திக்கொண்டும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களும், வீடற்றவர்களுமாய் இருக்கிறோம்.
12
நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைக்கிறோம். மற்றவர்கள் எங்களை சபிக்கும்போது, நாங்களோ ஆசீர்வதிக்கிறோம்; நாங்கள் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம்;
13
மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகிறபொழுது, நாங்கள் தயவுடன் பதிலளிக்கிறோம். நாங்கள் இதுவரை உலகத்தின் கழிவுப் பொருட்களாகவும், பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options