தீத்து1
Listen to this chapter
0:00
0:00
1
பவுலாகிய நான் இறைவனின் ஊழியனாகவும், இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறேன். நான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய விசுவாசத்திற்காகவும், இறை பக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவிற்காகவுமே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
2
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார்.
3
இப்பொழுது அவரால் நியமிக்கப்பட்ட காலத்தில், தம்முடைய வார்த்தையை வெளியரங்கமாக்கினார். நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாய் இது வெளியரங்கமாக்கப்பட்டது.
4
பவுலாகிய நான் நமது பொதுவான விசுவாசத்தில் என் உண்மையுள்ள மகனான தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
5
கிரேத்தா தீவில் முடிவுபெறாதிருக்கிற வேலைகளை, ஒழுங்குபடுத்தி முடிப்பதற்காகவே நான் உன்னை அங்கு விட்டுவந்தேன். நான் உனக்குக் கூறியதுபோல, எல்லாப் பட்டணங்களிலும் நீ சபைத்தலைவர்களை நியமி.
6
ஒரு சபைத்தலைவன் குற்றம் காணப்படாதவனாகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும். அவனுடைய பிள்ளைகளும் முரட்டுகுணமுடையவர்கள் என்றோ, கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படுகிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் விசுவாசிகளாய் இருக்கவேண்டும்.
7
ஏனெனில், ஒரு திருச்சபைக்குப் பொறுப்பாயிருக்கும் ஊழியன், இறைவனின் வேலை அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாக இருக்கவேண்டும். அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது. அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது.
8
அவன் மற்றவர்களை உபசரிக்கிறவனாகவும், நன்மையை நேசிக்கிறவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், நீதிமானாகவும் இருக்கவேண்டும். அவன் பரிசுத்தமுள்ளவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும் இருக்கவேண்டும்.
9
தனக்குப் போதித்துக் கொடுக்கப்பட்ட நம்பத்தக்க இந்தச் செய்தியை அவன் உறுதியாய் நம்பியிருக்கவேண்டும். அப்பொழுதே அவன் ஆரோக்கியமான போதனையினால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். அதற்கு முரண்பாடாய் இருக்கிறவர்களையும் எதிர்த்துச் சரியானதை எடுத்துச்சொல்வான்.
10
ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள்.
11
அவர்களுடைய வாய்களை அடக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக்கூடாத காரியங்களை போதித்து, முழுக் குடும்பங்களையும் பாழாக்குகிறார்கள். இழிவான விதத்தில் தாங்கள் ஆதாயம் பெறவே, இப்படிச் செய்கிறார்கள்.
12
அவர்களைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசியே அவர்களைக்குறித்து, “கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் கொடிய மிருகங்கள். சோம்பேறிகளான உணவுப்பிரியர்” என்று கூறியிருக்கிறான்.
13
இந்த சாட்சி உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாய் கடிந்துகொள். அப்பொழுதுதான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருந்து,
14
யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களின் கட்டளைகளுக்கும் செவிகொடாதிருப்பார்கள்.
15
தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய புத்தியும் மனசாட்சியும் சீர்கெட்டிருக்கின்றன.
16
அவர்கள் தாங்கள் இறைவனை அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலேயே, இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note