வெளிப்படுத்தல் 18:20-24
20
“பரலோகமே, அவளைக்குறித்து மகிழ்ச்சியடைவாயாக! பரிசுத்தவான்களே, அப்போஸ்தலரே, இறைவாக்கினரே, நீங்களும் மகிழ்ச்சியடைவீர்களாக! அவள் உங்களுக்குச் செய்தவற்றிற்காக, இறைவன் அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்திருக்கிறார்.”
21
அப்பொழுது ஒரு வல்லமையுள்ள இறைத்தூதன், ஒரு பாறாங்கல்லை எடுத்துக் கடலில் எறிந்தான். அது ஒரு பெரிய ஆலைக்கல்லின் அளவுடையதாய் இருந்தது. அவன் சொன்னதாவது: “பாபிலோன் மாபெரும் நகரமே! நீ இப்படிப்பட்ட ஆவேசத்துடன் வீசி எறியப்படுவாய். நீ இனியொருபோதும் காணப்படமாட்டாய்.
22
வீணை மீட்டுகிறவர்களின் இசையும், இசைக்கலைஞர், புல்லாங்குழல் ஊதுகிறவர்கள், எக்காளம் ஊதுகிறவர்கள் ஆகியோரின் இசையும் இனியொருபோதும் உன்னிடத்தில் ஒலிக்காது. எந்தத் தொழிலைச் செய்யும் தொழிலாளியும், இனியொருபோதும் உன்னிடத்தில் காணப்படமாட்டான். ஆலைக்கல் ஆட்டுவதால் ஏற்படும் சத்தமும், இனியொருபோதும் உன்னிடத்தில் கேட்காது.
23
விளக்கு வெளிச்சமும் இனியொருபோதும் உன்னிடத்தில் வீசாது. மணமகனின் குரலும் மணமகளின் குரலும் இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்கமாட்டாது. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தில் பெரிய மனிதராய் இருந்தார்கள். உன்னுடைய மந்திரச் சொற்களினால் எல்லா நாட்டினரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.
24
இறைவாக்கினரின் இரத்தமும் பரிசுத்தவான்களின் இரத்தமும் உன்னிலே சிந்தப்பட்டது. பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக்கறையும் உன்னில் காணப்பட்டது.”
Settings