எண்ணாகமம் 9:6-14
6
ஆனால் அந்த நாளில் சிலர் பிரேதத்தைத் தொட்டதினால், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக இருந்தார்கள். எனவே அவர்களால் அந்த நாளில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. அவர்கள் அன்றைய தினமே மோசேயிடமும், ஆரோனிடமும் வந்தார்கள்.
7
அவர்கள் மோசேயிடம், “ஒரு பிரேதத்தைத் தொட்டதினால் நாங்கள் அசுத்தமாகிவிட்டோம். மற்ற இஸ்ரயேலரோடு குறிப்பிட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொடுப்பதிலிருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டார்கள்.
8
அதற்கு மோசே, “உங்களைப்பற்றி யெகோவா என்ன கட்டளை கொடுக்கிறார் என நான் அவரிடமிருந்து அறிந்து வரும்வரை பொறுத்திருங்கள்” என்றான்.
9
அப்பொழுது யெகோவா மோசேயிடம்,
10
“நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘உங்களிலோ அல்லது உங்கள் சந்ததியிலோ, யாராவது பிரேதத்தைத் தொட்டு அசுத்தமாயிருந்தாலும் அல்லது பயணம் போயிருந்தாலும், அவர்கள் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாடலாம்.
11
அவர்கள் இரண்டாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் வேளையிலேயே, பஸ்காவைக் கொண்டாடவேண்டும். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்துடனும், கசப்புள்ள கீரையுடனும் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியைச் சாப்பிடவேண்டும்.
12
காலைவரை அதில் எதையும் மீதியாக வைக்கக்கூடாது; அதன் எலும்புகளை முறிக்கவும் கூடாது. அவர்களும் பஸ்காவைக் கொண்டாடும்போது, இந்த எல்லா விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும்.
13
ஆனால் ஒரு மனிதன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாகவும், பயணம் போகாமலும் இருந்து, பஸ்காவைக் கொண்டாடத் தவறினால், அம்மனிதன் தன் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில், அவன் நியமிக்கப்பட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொண்டுவரவில்லை. எனவே அவன் தன் பாவத்தினால் வந்த விளைவைத் தானே சுமக்கவேண்டும்.
14
“ ‘அத்துடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் ஒருவன், யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவன் சட்டங்களின்படியும், விதிமுறைகளின்படியும் அதைக் கொண்டாடவேண்டும். தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளையே நீங்கள் வைத்திருக்கவேண்டும்’ ” என்றார்.
Settings