எண்ணாகமம் 22:5-14
5
பேயோரின் மகன் பிலேயாமை அழைப்பிக்கத் தூதுவரை அனுப்பினான். பிலேயாம் தான் பிறந்த நாட்டில், ஐபிராத்து நதியருகேயிருந்த பெத்தூரில் இருந்தான். பாலாக் தூதுவர்களிடம், “எகிப்திலிருந்து ஒரு மக்கள் கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் நாடெங்கும் நிரம்பி எனக்குப் பக்கத்தில் குடியேறியிருக்கிறார்கள்.
6
இப்பொழுது நீ வந்து இந்த மக்களின்மேல் ஒரு சாபத்தைப்போடு. ஏனென்றால் அவர்கள் என்னைவிட அதிக பலமுள்ளவர்களாயிருக்கிறார்கள். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை அவர்களைத் தோற்கடித்து, இந்த நாட்டைவிட்டுத் துரத்திவிட என்னால் இயலும். ஏனெனில் நீ ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், நீ சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.
7
மோவாபிய சபைத்தலைவர்களும், மீதியானிய தலைவர்களும் குறிகேட்பதற்கான கூலியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அவர்கள் பிலேயாமிடம் வந்தபோது பாலாக் சொல்லியிருந்ததை அவனிடம் கூறினார்கள்.
8
பிலேயாம் அவர்களிடம், “இன்று இரவு நீங்கள் இங்கே தங்குங்கள்; யெகோவா எனக்குத்தரும் பதிலை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான். எனவே மோவாபின் தலைவர்கள் அவனுடன் தங்கினார்கள்.
9
அப்பொழுது இறைவன் பிலேயாமிடம் வந்து, “உன்னுடன் இருக்கும் இந்த மனிதர்கள் யார்?” என்று கேட்டார்.
10
அதற்கு பிலேயாம் இறைவனிடம், “சிப்போரின் மகனான மோவாபின் அரசன் பாலாக் இவர்கள்மூலம் ஒரு செய்தியை எனக்கு அனுப்பியிருக்கிறான்:
11
அவன், ‘எகிப்திலிருந்து வந்த இந்த மக்கள் கூட்டம் நாடெங்கிலும் பரவியிருக்கிறது. நீர் வந்து எனக்காக இவர்கள்மேல் ஒரு சாபத்தைப்போடும். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை நான் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களைத் துரத்திவிட என்னால் முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான்.
12
அப்பொழுது இறைவன் பிலேயாமிடம், “நீ அவர்களுடன் போகவேண்டாம்; அந்த மக்கள்மேல் சாபத்தைப்போடவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
13
மறுநாள் காலையில் பிலேயாம் எழுந்து பாலாக்கின் தலைவர்களிடம், “நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள்; யெகோவா என்னை உங்களோடு வருவதற்கு அனுமதிக்கவில்லை” என்றான்.
14
எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பிப்போய், “பிலேயாம் எங்களோடு வருவதற்கு மறுத்துவிட்டான்” என்றார்கள்.
Settings