எண்ணாகமம் 14:11-20
11
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இம்மக்கள் எவ்வளவு காலத்திற்கு என்னை அவமதித்து நடப்பார்கள்? நான் இத்தனை அற்புத அடையாளங்கள் அவர்கள் மத்தியில் செய்திருக்கும்போது, எவ்வளவு காலத்திற்கு அவர்கள் என்னை விசுவாசிக்க மறுப்பார்கள்?
12
அவர்களை நான் கொள்ளைநோயினால் வாதித்து அழிப்பேன். உன்னையோ அவர்களைப்பார்க்கிலும் பெரியதும் வல்லமையுள்ளதுமான ஒரு நாடாக்குவேன்” என்றார்.
13
அதற்கு மோசே யெகோவாவிடம், “அப்பொழுது எகிப்தியர் இதைக்குறித்து கேள்விப்படுவார்களே! நீர் இந்த மக்களை உம்முடைய வல்லமையினால் எகிப்திலிருந்து இங்கே கொண்டுவந்தீர்.
14
எகிப்தியர் நாட்டு மக்களுக்கு அதைப்பற்றிச் சொல்வார்கள். யெகோவாவே, நீர் இந்த மக்கள் மத்தியில் இருக்கிறீர் என்றும், உமது மேகம் அவர்கள்மேல் இருக்கிறதென்றும், அவர்கள் உம்மை நேருக்குநேர் காணும்படி செய்தீர் என்றும், நீரே அவர்களுக்கு முன்பாக பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத்தூணாகவும் போகிறீர் என்றும் அவர்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
15
நீர் இப்பொழுது இம்மக்களை ஒரேயடியாகக் கொன்றுபோடுவீரானால், உம்மைப் பற்றிய விவரத்தைக் கேள்விப்பட்ட பிறநாடுகள்,
16
‘தாம் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் இந்த மக்களைக் கொண்டுவர யெகோவாவினால் முடியவில்லை. அதனால் அவர்களை பாலைவனத்திலேயே கொன்றுபோட்டார்’ என்பார்களே” என்றான்.
17
“யெகோவாவே, நீர் அறிவித்திருக்கிற உமது வல்லமையை இப்பொழுதே வெளிப்படுத்திக் காட்டுவீராக:
18
‘யெகோவா கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர், அன்பினால் நிறைந்தவராய் பாவத்தையும் கலகத்தையும் மன்னிக்கிறவர். ஆனாலும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்பிப்போக விடாதவர். பெற்றோரின் பாவங்களுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் பிள்ளைகளைத் தண்டிக்கிறவர்’ என்று அறிவித்திருக்கிறீரே.
19
உமது மிகுந்த அன்பின்படியே, எகிப்திலிருந்து வந்தகாலம் தொடங்கி இன்றுவரை அவர்களை மன்னித்ததுபோல், இம்மக்களின் பாவத்தையும் இப்பொழுதும் மன்னியும்” என்று மன்றாடினான்.
20
அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன்.
Settings