Skip to content
லூக்கா 10:1-17

லூக்கா 10:1-17

1
இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார்.
2
இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
3
புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன்.
4
நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம்.
5
“நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள்.
6
சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும்.
7
நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம்.
8
“நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள்.
9
அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10
ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம்,
11
‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
12
நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
13
“கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
14
ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும்.
15
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய்.
16
“உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார்.
17
அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options