Skip to content
லேவியராகமம் 13:1-28

லேவியராகமம் 13:1-28

1
மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா கூறியதாவது:
2
“ஒருவனுக்கு உடம்பில் வீக்கமோ, கொப்பளமோ அல்லது தோலில் வெண்புள்ளிகளோ இருந்து, அது தொற்றும் தோல்வியாதியானால், அவன் ஆசாரியனான ஆரோனிடம் அல்லது ஆசாரியராய் இருக்கும் அவனுடைய மகன்களில் ஒருவனிடம் அழைத்துச்செல்லப்பட வேண்டும்.
3
ஆசாரியன் அவனுடைய தோலில் உள்ள புண்ணைச் சோதித்துப் பார்க்கவேண்டும். புண்ணிலுள்ள உரோமம் வெண்மையாக மாறி, அந்தப்புண் தோலின் கீழ் ஆழமாகக் காணப்படுமானால், அது தொற்றும் தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனைப் பரிசோதிக்கிறபோது, அவனை சம்பிரதாயப்படி அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும்.
4
ஆனால் தோலிலுள்ள புண் வெண்மையாக இருந்து, தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும், அதில் இருக்கும் உரோமம் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் நோயுள்ளவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
5
ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைத் திரும்பவும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்தப்புண் மாறாமலும், தோலில் பரவாமலும் இருக்கக் கண்டால், இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமையிலேயே வைக்கவேண்டும்.
6
திரும்பவும் ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது புண் ஆறி, தோலில் பரவாமல் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு சிரங்கு மட்டுமே. அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
7
ஆனாலும், அவன் ஆசாரியனிடம் தன்னைக் காண்பித்து சுத்தமானவன் என தீர்க்கப்பட்டபின், அச்சிரங்கு தோலில் பரவுமானால், அவன் திரும்பவும் ஆசாரியனுக்கு முன்பாக வரவேண்டும்.
8
ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த சிரங்கு தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு தொற்று வியாதியாகும்.
9
“எவனுக்காவது தொற்றும் தோல்வியாதி இருக்குமானால், அவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்பட வேண்டும்.
10
ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் தோலில் வெண்மையான வீக்கம் காணப்பட்டு, அது உரோமத்தையும் வெண்மையாக்கி, அந்த வீக்கத்தில் வெடிப்பு ஏற்பட்டு சதை காணப்பட்டால்,
11
அது நாள்பட்ட ஒரு தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும். ஆசாரியன் அவனைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், அவன் ஏற்கெனவே அசுத்தமானவன்.
12
“ஆனால் ஆசாரியன் பார்க்கக்கூடிய அளவு அந்த வியாதி நோயுற்றவனின் தலைமுதல் கால்வரை, தோல் முழுவதும் பரவியிருக்குமானால்,
13
ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோய் அவனுடைய உடல் முழுவதும் பரவியிருந்தால், அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட வேண்டும். அவன் உடல் முழுவதும் வெண்மையாக மாறியிருந்தால் அவன் சுத்தமாவான்.
14
எப்பொழுதாவது அவனுடைய தோல் வெடித்துச் சதை காணப்பட்டால் அவன் அசுத்தமானவனாய் இருப்பான்.
15
ஆசாரியன் சதை தெரிவதைக் காணும்போது, அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். சதை தெரிவது அசுத்தமாகும்; அவனுக்கு இருப்பது தொற்று வியாதியாகும்.
16
அந்த தெரியும் சதை மாறி வெண்மையாகினால், அவன் ஆசாரியனிடம் போகவேண்டும்.
17
ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப்புண் வெண்மையாக மாறியிருந்தால், நோயுற்றவன் சுத்தமானவன் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
18
“ஒரு மனிதனின் தோலில் கட்டி உண்டாகி, அது குணமடையும்போது,
19
அந்தக் கட்டி இருந்த இடத்தில் வெண்மையான வீக்கமோ அல்லது சிவப்பும் வெண்மையுமான புள்ளியோ தோன்றினால், அவன் தன்னை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.
20
ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகவும், அதிலுள்ள உரோமம் வெண்மையாகவும் மாறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அந்த மனிதனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். இதுவும் கட்டி இருந்த இடத்தில் தோன்றிய தொற்றும் தோல்வியாதியாகும்.
21
ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அதில் வெண்மையான உரோமம் இல்லாமலும், தோலைவிட ஆழமில்லாமலும், புண் ஆறியுமிருந்தால், அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
22
அது தோலில் பரவுகிறதாய் இருந்தால் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
23
ஆனால் புள்ளி மாறாமலும் பரவாமலும் இருந்தால், அது கொப்பளத்திலிருந்து உண்டான தழும்பு மாத்திரமே. ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
24
“ஒருவனது தோல் வெந்து, வெந்ததினால் வெடித்தசதையில் வெண்சிவப்பான அல்லது வெண்மையான புள்ளி தோன்றினால்,
25
ஆசாரியன் அந்தப் புள்ளியைப் பரிசோதிக்க வேண்டும். அதிலுள்ள உரோமம் வெண்மையாகி, அந்தப்புண் தோலைவிட ஆழமாகக் காணப்பட்டால், அதுவும் வெந்துபோனதிலிருந்து தோன்றிய தொற்று வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதி ஆகும்.
26
ஆனால் ஆசாரியன் அதைப் பரிசோதித்துப் பார்த்து, அந்தப் புள்ளியில் வெண்மையான உரோமம் இல்லாமலும், அது தோலைவிட ஆழமில்லாமலிருந்து, புண் ஆறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
27
ஏழாம்நாளில் ஆசாரியன் அவனை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்த வியாதி தோலில் பரவியிருக்குமானால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
28
ஆனாலும் அந்தப் புள்ளி மாறாமலும், தோலில் படராமலும் புண் ஆறியிருந்தால், அது வெந்துபோனதினால் உண்டான ஒரு வீக்கமாகும். ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். ஏனெனில், அது வெந்துபோனதினால் உண்டான தழும்பு மாத்திரமே.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options