புலம்பல் 4:1-10
1
தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.
2
ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.
3
நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, கொடூர மனமுள்ளவர்களானார்கள்.
4
தாகத்தினால் குழந்தையின் நாவு அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.
5
சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.
6
உதவும் கரம் எதுவுமின்றி ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் தண்டனையைவிட, என் மக்களின் தண்டனை பெரிதாயிருக்கிறது.
7
அவர்களின் இளவரசர்கள் உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.
8
ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
9
பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.
10
இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!
Settings