நியாயாதிபதிகள் 4:4-11
4
அக்காலத்தில் லபிதோத்தின் மனைவி தெபோராள் இறைவாக்கினளாக இருந்தாள். அவளே இஸ்ரயேலரை நீதி விசாரித்து வந்தாள்.
5
எப்பிராயீம் மலையில் ராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராளின் பேரீச்ச மரத்தின்கீழ் அவள் நீதிமன்றத்தைக் கூட்டுவாள். இஸ்ரயேலர் தமது வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள அங்கே அவளிடம் வருவார்கள்.
6
அவள் நப்தலியிலிருக்கும் கேதேசிலிருந்து அபினோமின் மகன் பாராக்கை வரவழைத்து அவனிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறதாவது: நீ நப்தலியிலும், செபுலோனிலும் பத்தாயிரம் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்தி தாபோர் மலைக்குப்போ.
7
நான் யாபீனின் படைத்தளபதி சிசெராவையும், அவனுடைய இரதங்களையும், அவனுடைய படையையும் கீசோன் ஆற்றண்டையில் வரும்படி தூண்டி உன்னுடைய கையில் ஒப்படைப்பேன் என்கிறார்” என்றாள்.
8
அப்பொழுது பாராக் அவளிடம், “நீ என்னுடன் வந்தால் நான் போவேன்; நீ என்னுடன் வராவிட்டால் நானும் போகமாட்டேன்” என்று சொன்னான்.
9
அதற்கு தெபோராள், “சரி; நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இவ்விதம் நீ போவதானால் அந்தப் புகழ் உன்னுடையதாயிராது. யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றாள். அதன்பின் தெபோராள் பாராக்குடன் கேதேஸுக்குப் போனாள்.
10
அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள்.
11
கேனியனான ஏபேர் மற்ற கேனியர்களை விட்டுப் பிரிந்திருந்தான், கேனியர் மோசேயின் மைத்துனனான ஒபாபின் சந்ததியில் வந்தவர்கள், அவன் கேதேசிற்கு அருகிலுள்ள சானாயிமில் இருக்கிற பெரிய மரத்தடியில் குடியிருந்தான்.
Settings