நியாயாதிபதிகள் 18:14-20
14
அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள்.
15
எனவே அவர்கள் வாலிபனான லேவியன் இருந்த மீகாவின் வீட்டின் பக்கம் சென்று அவனை வாழ்த்தினார்கள்.
16
அப்பொழுது தாணிலிருந்து யுத்த ஆயுதந்தரித்த அறுநூறு வீரர்களும் அந்த நுழைவாசலில் நின்றனர்.
17
பூசாரியும், ஆயுதம் தாங்கிய வீரர்களும் நுழைவாசலில் நிற்கையில், நாட்டை உளவுபார்க்க வந்த ஐந்து வீரர்களும் உள்ளே சென்று, அங்கிருந்த செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற வீட்டு தெய்வங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்தார்கள்.
18
இந்த ஐந்து மனிதர்கள் மீகாவின் வீட்டிற்குள்ளே சென்று செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற தெய்வங்களையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுப்பதைக்கண்ட பூசாரி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
19
அதற்கு அவர்கள், “அமைதியாய் இரு! ஒரு வார்த்தையும் பேசாதே! எங்களுடன் வந்து எங்கள் தகப்பனாகவும், பூசாரியாகவும் இரு. ஒருவனின் வீட்டிற்குப் பூசாரியாக இருப்பதைவிட, இஸ்ரயேலின் கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் பூசாரியாயிருப்பது நல்லதல்லவா” எனக் கேட்டனர்.
20
அப்பொழுது பூசாரி மகிழ்ச்சியடைந்தான். அவன் ஏபோத்தையும், மற்றும் வீட்டு தெய்வங்களையும், செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான்.
Settings