யோசுவா 15:1-19
1
வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது.
2
அதன் தென் எல்லை உப்புக்கடலில் தென் மூலையிலுள்ள முனையிலிருந்து,
3
அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது.
4
பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை.
5
யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும். வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி,
6
அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது.
7
அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது.
8
பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது.
9
அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது.
10
பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது.
11
அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது.
12
தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும். மேலே கூறப்பட்டவை யூதாவின் கோத்திரத்திற்கு அதன் வம்சங்களுக்கேற்ப வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாகும்.
13
யோசுவாவிற்கு யெகோவா கட்டளையிட்டபடியே அவன் யூதா தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகனாகிய காலேப்புக்கு கொடுத்தான். அது கீரியாத் அர்பா அதாவது எப்ரோன் பிரதேசம் ஆகும். அர்பா என்பவன் ஏனாக்கின் முற்பிதா.
14
காலேப் மூன்று ஏனாக்கியரின் மகன்களை எப்ரோனிலிருந்து துரத்திவிட்டான். அவர்கள் ஏனாக்கின் வழித்தோன்றல்களான சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள்.
15
அங்கிருந்து அவன் தெபீரில் வசித்தவர்களுக்கெதிராக படையெடுத்துச்சென்றான். தெபீர் என்பது முன்பு கீரியாத் செபேர் எனப்பட்டது.
16
காலேப், “கீரியாத் செபேர் நகரைத் தாக்கிக் கைப்பற்றும் வீரனுக்கு, என் மகள் அக்சாளைத் திருமணம் செய்துவைப்பேன்” என்று சொல்லியிருந்தான்.
17
காலேபின் சகோதரனான கேனாசின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
18
ஒரு நாள் அவள் ஒத்னியேலுடன் வந்தபோது, அவளைத் தன் தகப்பனிடம் இன்னும் ஒரு வயல் நிலத்தைக் கேட்கும்படி அவளைத் தூண்டினான். அப்படியே அவள் கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19
அதற்கு அவள், “எனக்கு இன்னும் ஒரு உதவிசெய்ய வேண்டும். நீங்கள் எனக்கு, ‘நெகேவ்’ என்னும் வறண்டபகுதியில் நிலத்தை கொடுத்திருப்பதால் நீரூற்றுள்ள நிலத்தையும் கொடுங்கள்” என்றாள். அப்படியே காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான்.
Settings