யோபு 8:11-19
11
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
12
அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும், மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன.
13
இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்; இறைவனை மறுதலிப்போரின் நம்பிக்கையும் அப்படியே அழிந்துபோகும்.
14
அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை; அவன் சிலந்தி வலைகளிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
15
அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்; அவன் அதைப் பிடித்துத் தொங்கினாலும் அது அவனைத் தாங்காது.
16
அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்; அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து,
17
தன் வேர்களினால் கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது.
18
அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும்.
19
அதின் உயிர் வாடிப்போகிறது, அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன.
Settings