எரேமியா 49:1-6
1
அம்மோனியரைப் பற்றியது: யெகோவா கூறுவது இதுவே: “இஸ்ரயேலுக்கு மகன்கள் இல்லையோ? அவளுக்கு வாரிசுகள் இல்லையோ? அப்படியானால், மோளேக் தெய்வம் காத் நாட்டை உரிமையாக்கிக் கொண்டது ஏன்? அதனை வணங்குகிறவர்கள் ஏன் அதன் பட்டணங்களில் வாழ்கின்றனர்?
2
ஆயினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அம்மோனியரின் ரப்பா பட்டணத்துக்கெதிராக நான் போரின் முழக்கத்தை எழுப்புவேன். அந்த இடம் இடிபாடுகளின் குவியலாகும். அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் நெருப்பினால் எரிக்கப்படும். அப்பொழுது தங்களை வெளியே துரத்திவிட்டவர்களை, இஸ்ரயேலர் வெளியே துரத்திவிடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
3
“எஸ்போனே! புலம்பி அழு! ஏனெனில், ஆயி பட்டணம் அழிக்கப்பட்டது. ரப்பாவின் குடிகளே! கதறியழுங்கள். துக்கவுடை உடுத்தித் துக்கங்கொண்டாடுங்கள். வேலிகளுக்குள்ளே இங்கும் அங்கும் விரைந்தோடுங்கள். ஏனெனில், மோளேகு தெய்வம் தனது பூசாரிகளுடனும் அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும்.
4
உண்மையற்ற மகளே! உன் பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமையாய்ப் பேசுகிறாய்? உன் வளம் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமை பேசுகிறாய்? நீ உன் செல்வங்களில் நம்பிக்கை வைத்து, ‘என்னைத் தாக்குபவன் யார்’ என்கிறாயே!
5
உன்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும், உனக்குப் பயங்கரத்தைக் கொண்டுவருவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “உங்களில் ஒவ்வொருவரும் வெளியே துரத்தப்படுவீர்கள். தப்பியோடுகிறவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை.
6
“இருந்தும் பிற்பாடு அம்மோனியரின் செல்வங்களை நான் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Settings