Skip to content
எரேமியா 22:20-30

எரேமியா 22:20-30

20
லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. பாசானில் உனது குரல் கேட்கட்டும். அபாரீமிலிருந்தும் அழு. ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள்.
21
பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய். உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது. நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
22
காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள். அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும் நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய்.
23
லெபனோனில் வாழ்பவளே! கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே! பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது, நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய்.
24
யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம்.
25
நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும்
26
நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள்.
27
நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார்.
28
கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ? அவனும், அவனுடைய பிள்ளைகளும் அவர்கள் அறியாத ஒரு நாட்டில் ஏன் வீசி எறியப்பட வேண்டும்.
29
ஓ நாடே! நாடே! நாடே! யெகோவாவின் வார்த்தையைக் கேள்;
30
யெகோவா கூறுவது இதுவே: “தன் வாழ்நாளில் செழித்தோங்காத பிள்ளைகளற்ற ஒரு மனிதனைப்போல் இவனைக் குறித்து எழுதிவை. அவனுடைய வழித்தோன்றல்களில் ஒருவனும் செழித்தோங்கமாட்டான். தாவீதின் அரியணையில் உட்காரவுமாட்டான். இனிமேல் யூதாவில் அரசாளவுமாட்டான் என்கிறார்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options