Skip to content
ஏசாயா 3:1-12

ஏசாயா 3:1-12

1
இப்பொழுது பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்: உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.
2
மாவீரனையும், போர்வீரனையும், நீதிபதியையும், இறைவாக்கினனையும், குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,
3
ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும், மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
4
“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
5
மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும், இளையோர் முதியோருக்கு விரோதமாகவும், கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
6
ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, “உன்னிடம் மேலுடை இருக்கிறது; நீயே எங்களுக்குத் தலைவனாயிரு. பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.
7
ஆனால் அவனோ அந்நாளில், “என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது; இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை. என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
8
எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
9
அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள். அவைகளை மறைத்து வைக்கவில்லை. ஐயோ! அவர்களுக்குக் கேடு; அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
10
நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்; ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
11
கொடியவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் செய்யப்படும்.
12
வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்; அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options