ஏசாயா 2:10-22
10
யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி, கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்!
11
கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்; அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.
12
அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், உயர்த்தப்பட்ட அனைத்திற்கும் சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்; அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள்.
13
அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும், பாசானின் எல்லா கர்வாலி மரங்களும்,
14
உயர்ந்த எல்லா மலைகளும், உயரமான எல்லாக் குன்றுகளும்,
15
உயர்வான ஒவ்வொரு கோபுரமும், அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும்,
16
தர்ஷீஸின் கப்பல் ஒவ்வொன்றும், கம்பீரமான ஒவ்வொரு மரக்கலமும் தாழ்த்தப்படும்.
17
மனிதரின் கர்வம் அடக்கப்படும், மனிதரின் பெருமையும் தாழ்த்தப்படும். அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்;
18
விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
19
யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது, மக்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக கன்மலைகளின் குகைகளுக்குள்ளும், மண்ணிலுள்ள குழிகளுக்குள்ளும் புகுந்துகொள்வார்கள்.
20
அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும் எறிந்துவிடுவார்கள்.
21
பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது, மனிதர்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக, கன்மலைகளின் வெடிப்புகளுக்குள்ளும், பாறைச் சரிவுகளின் கீழும் புகுந்துகொள்வார்கள்.
22
மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள், அவனுடைய உயிர் அவனுடைய நாசியின் மூச்சில்தானே இருக்கிறது. மதிக்கப்படுவதற்கு அவனில் என்ன ஆற்றல் இருக்கிறது?
Settings