ஏசாயா 28:14-22
14
ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
15
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள்.
16
ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இதோ, நான் சீயோனில் ஒரு கல்லை வைக்கிறேன்; அது சோதித்துப் பார்க்கப்பட்ட கல், அது உறுதியான அஸ்திபாரத்துக்கான விலையேறப்பெற்ற மூலைக்கல்; அதில் நம்பிக்கை வைக்கும் எவரும் ஒருபோதும் பதறமாட்டார்கள்.
17
நான் நீதியை அளவு நூலாக்குவேன்; நியாயத்தைத் தூக்கு நூலாக்குவேன். உங்கள் பொய்யான அடைக்கலத்தை, கல்மழை அழிக்கும்; வெள்ளம் உங்கள் மறைவிடத்திற்கு மேலாகப் பெருக்கெடுக்கும்.
18
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள்.
19
அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்; அது காலைதோறும், இரவும் பகலும் தண்டிப்பதற்காக வந்து வாரிக்கொண்டு போகும்.” இச்செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்வது உங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும்.
20
கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது; மூடிக்கொள்ள போர்வையின் அகலமும் போதாது.
21
யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார், கிபியோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல் எழும்புவார். அவர் தமது வேலையை, எதிர்பாராத வேலையைச் செய்வதற்கும், தமது கடமையை, தாம் விரும்பாத கடமையை நிறைவேற்றுவதற்கும் எழும்புவார்.
22
உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள், இல்லையெனில் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் இன்னும் பாரமாகும். யெகோவா, சேனைகளின் யெகோவா முழு நாட்டுக்கும் விரோதமாகத் திட்டமிட்டிருக்கும் அழிவை எனக்குச் சொல்லியிருக்கிறார்.
Settings