ஆதியாகமம் 34:25-31
25
மூன்று நாட்களுக்குப்பின் அவர்கள் யாவரும் இன்னும் நோவுடன் இருக்கையில், தீனாளின் சகோதரர்களான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்களும் வாள்களுடன் போய், பட்டணத்து மக்கள் எதிர்பாராத வேளையில் அதைத் தாக்கி, எல்லா ஆண்களையும் கொன்றார்கள்.
26
ஏமோரையும் அவன் மகன் சீகேமையும் வாளால் வெட்டிக் கொன்றபின், சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள்.
27
பட்டணத்து மனிதர் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கையில் யாக்கோபின் மகன்கள் அந்த உடல்களின்மேல் நடந்து வந்து, தங்கள் சகோதரியைக் கறைப்படுத்திய அந்தப் பட்டணத்தைக் கொள்ளையடித்தார்கள்.
28
அவர்கள் ஆடுமாடுகளையும், கழுதைகளையும் மற்றும் பட்டணத்திலும் வயல்வெளிகளிலும் உள்ள அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அபகரித்தார்கள்.
29
அவர்கள் அங்கிருந்த எல்லா செல்வத்தையும், பெண்கள் பிள்ளைகள் எல்லோரையும், வீடுகளிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையாகக் கொண்டுபோனார்கள்.
30
அப்பொழுது யாக்கோபு தன் மகன்களான சிமியோன், லேவி ஆகியோரிடம், “இந்நாட்டில் வாழும் கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் பெயரை நாசமாக்கி, எனக்குக் கஷ்டத்தை உண்டு பண்ணிவிட்டீர்களே! நாமோ மிகச் சிலர், அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்கினால், நானும் என் குடும்பமும் அழிந்துபோவோமே!” என்றான்.
31
அதற்கு அவர்கள், “அப்படியானால் எங்கள் சகோதரி தீனாளை அவன் ஒரு வேசியைப்போல் நடத்தியது சரியோ?” என்று கேட்டார்கள்.
Settings