ஆதியாகமம் 18:17-33
17
அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா?
18
நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.
19
ஏனெனில் நானே ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தேன், அவன் தனக்குப்பின் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, யெகோவாவின் வழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை வழிநடத்துவான். அப்பொழுது யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்றார்.
20
அதன்பின் யெகோவா, “சோதோம், கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாய் இருக்கிறது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் அதிகமாய் எழும்பியிருக்கின்றது.
21
அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப்பார்ப்பேன். அப்படியில்லையென்றால், அதையும் அறிவேன்” என்றார்.
22
பின்பு அந்த மனிதர் அவ்விடத்தைவிட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
23
ஆபிரகாம் யெகோவாவை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ?
24
ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பதுபேர் இருந்தால் அதை அழித்து விடுவீரோ? நீதிமானான அந்த ஐம்பது பேர்களுக்காகிலும் அதை அழியாமல் விடமாட்டீரோ?
25
கொடியவர்களுடன் நீதிமான்களையும் கொல்லுவதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்றதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்யமாட்டாரோ?” என்று கேட்டான்.
26
அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார்.
27
மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன்,
28
ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
29
மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான். அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
30
பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
31
ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
32
மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
33
யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான்.
Settings