எஸ்றா 7:1-10
1
இவற்றுக்குப்பின் பெர்சியா அரசன் அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில் செராயாவின் மகன் எஸ்றா பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். எஸ்றா செராயாவின் மகன், செராயா அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின் மகன்,
2
இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
3
அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன்,
4
மெராயோத் செராகியாவின் மகன், செரகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்,
5
புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.
6
இந்த எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தான். இவன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கொடுத்திருந்த மோசேயின் சட்டத்தை கற்றுத்தேர்ந்த ஆசிரியனாயிருந்தான். அவன் கேட்ட எல்லாவற்றையும் அரசன் அவனுக்குக் கொடுத்தான். ஏனெனில், அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் கரம் அவனோடிருந்தது.
7
அர்தசஷ்டா அரசன் அரசாண்ட ஏழாம் வருடத்தில் இஸ்ரயேல் மக்களில் சிலரான ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குப் போனார்கள்.
8
அரசனின் ஆட்சியின் ஏழாம் வருடம் ஐந்தாம் மாதத்தில் எஸ்றா எருசலேமை வந்துசேர்ந்தான்.
9
அவன் பாபிலோனிலிருந்து முதல் மாதம் முதலாம் நாளிலே தன் பிரயாணத்தைத் தொடங்கி, ஐந்தாம் மாதம் முதலாம் நாள் எருசலேமை வந்தடைந்தான். அவனுடைய இறைவனின் கிருபையின்கரம் அவன்மேல் இருந்தது.
10
ஏனெனில் எஸ்றா யெகோவாவின் சட்டத்தைக் கற்பதற்கும், கைக்கொள்வதற்கும், இஸ்ரயேலிலே அதன் விதிமுறைகளையும், சட்டங்களையும் கற்பிக்கவும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.
Settings