எசேக்கியேல் 44:17-27
17
“ ‘உள்முற்ற வாசலுக்குள் அவர்கள் வரும்போது அவர்கள் மென்பட்டு நூல் உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உள்முற்றநுழைவு வாசலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளை உடுத்தக்கூடாது.
18
அவர்கள் தங்கள் தலைகளில் மென்பட்டு தலைப்பாகைகளையும், இடைகளில் மென்பட்டு உள்ளுடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது.
19
அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்திற்குப் போகும்போது, அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் உடுத்தியிருந்த உடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
20
“ ‘அவர்கள் முழுதாக தலைகளைச் சவரம் செய்யவோ, தலைமயிரை நீளமாய் வளர்க்கவோ கூடாது. அவர்கள் தங்களுடைய தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளவேண்டும்.
21
ஆசாரியர்களில் யாரும் உள்முற்றத்தினுள் செல்லும்போது திராட்சை இரசம் அருந்தக்கூடாது.
22
விதவைகளையோ அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களையோ அவர்கள் திருமணம் செய்யக்கூடாது. இஸ்ரயேல் வம்சத்துக் கன்னிகைகளை அல்லது ஆசாரியர்களின் விதவைகளை மட்டுமே அவர்கள் திருமணம் செய்யலாம்.
23
அவர்கள் பரிசுத்தமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தை என் மக்களுக்குக் போதிக்கவேண்டும். அசுத்தமானதையும் சுத்தமானதையும் வித்தியாசப்படுத்துவது எப்படி என்பதையும் காண்பிக்கவேண்டும்.
24
“ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
25
“ ‘ஒரு ஆசாரியன், இறந்துபோன ஒருவனுக்கு அருகில் செல்வதால் தன்னை அசுத்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனாலும் இறந்தது அவனுடைய தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது விவாகமாகாத சகோதரியாக இருப்பின், அவன் அவ்வாறான அசுத்தத்துக்குள்ளாகலாம்.
26
அவன் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும்.
27
அதன்பின் பரிசுத்த ஆலயத்தில் ஆராதனை செய்வதற்காக அவன் உள்முற்றத்தினுள் போகும் நாளிலே, அவன் தனக்காக ஒரு பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Settings