எசேக்கியேல் 34:23-31
23
நான் என் அடியவனாகிய தாவீதை அவைகளின் ஒரே மேய்ப்பனாக ஏற்படுத்துவேன். அவன் அவைகளைப் பராமரிப்பான். அவன் அவைகளைப் பராமரித்து, அவைகளின் மேய்ப்பனாய் இருப்பான்.
24
யெகோவாவாகிய நானே அவைகளின் இறைவனாயிருப்பேன். என் அடியவனாகிய தாவீது அவைகளின் மத்தியில் இளவரசனாயிருப்பான். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்.
25
“ ‘நான் என் மக்களோடு ஒரு சமாதான உடன்படிக்கை செய்து, காட்டு மிருகங்களை நாட்டிலிருந்து துரத்திவிடுவேன். அப்பொழுது அவர்கள் பாலைவனத்தில் வாழ்ந்தும் காடுகளில் உறங்கியும் பாதுகாப்பாயிருப்பார்கள்.
26
அவர்களையும், என் மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள இடங்களையும் நான் ஆசீர்வதிப்பேன். நான் பருவகாலத்தில் மழையைப் பொழியச்செய்வேன். அது செழிக்கப்பண்ணும் ஆசீர்வாதமான மழையாக இருக்கும்.
27
வெளியின் மரங்கள் தங்கள் பழங்களைக் கொடுக்கும். பூமி தன் விளைச்சலைக் கொடுக்கும். மக்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுடைய நுகத்தடிகளை நான் முறித்து, அடிமைப்படுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
28
அவர்கள் இனியொருபோதும் நாடுகளால் கொள்ளையிடப்படவும் மாட்டார்கள். காட்டு மிருகங்கள் அவர்களை விழுங்குவதுமில்லை. அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். அவர்களை ஒருவனும் பயமுறுத்துவதுமில்லை.
29
பயிருக்குப் பேர்பெற்ற ஒரு நிலத்தை நான் அவர்களுக்கு அளிப்பேன். அவர்கள் இனியொருபோதும் நாட்டில் வரும் பஞ்சத்துக்கு இரையாவதில்லை. தேசத்தாரின் கேலிக்கும் ஆளாவதில்லை.
30
அப்பொழுது இறைவனும் கர்த்தருமாகிய நான் அவர்களோடிருக்கிறேன் என்றும், இஸ்ரயேல் குடும்பமாகிய அவர்கள் என் மக்கள் என்றும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
31
என் செம்மறியாடுகளே, என் மேய்ச்சலின் செம்மறியாடுகளே, நீங்கள் என் மக்கள். நானே உங்கள் இறைவன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல் என்றார்.’ ”
Settings