யாத்திராகமம் 8:20-31
20
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ அதிகாலையில் எழுந்து பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது அவனுக்கு முன்பாக நின்று அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு, என் மக்களைப் போகவிடு.
21
என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மேலும், உன் அதிகாரிகள்மேலும், உன் மக்கள்மேலும், உன் வீட்டிற்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் வாழும் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
22
“ ‘ஆனாலும் என் மக்கள் வாழும் கோசேன் நாட்டையோ, அந்த நாளில் நான் வித்தியாசமாக நடத்துவேன்; அங்கு வண்டுகள் இராது, அதனால் யெகோவாவாகிய நான் இந்த நாட்டில் இருக்கிறேன் என்பதை நீ அறிந்துகொள்வாய்.
23
இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
24
யெகோவா அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனுடைய அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும் திரளான வண்டுகள் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் போயிற்று.
25
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “நீங்கள் போய் உங்கள் இறைவனுக்கு பலி செலுத்துங்கள். இந்த நாட்டிலேயே அதைச் செலுத்துங்கள்” என்றான்.
26
அதற்கு மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல; ஏனெனில் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலிகள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும். அப்படி அவர்கள் பார்வையில் அருவருப்பாயிருக்கிற பலிகளை நாங்கள் செலுத்தினால், அவர்கள் எங்கள்மேல் கல்லெறியாமல் விடுவார்களோ?
27
எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அவருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணமாய்ப் பாலைவனத்திற்குப் போகவேண்டும்” என்றான்.
28
அப்பொழுது பார்வோன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பாலைவனத்தில் பலிசெலுத்தும்படி, நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால் நீங்கள் அதிக தூரம் போகக்கூடாது. இப்பொழுது எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான்.
29
அதற்கு மோசே, “நான் இங்கிருந்து போனவுடனேயே யெகோவாவிடம் மன்றாடுவேன்; நாளைக்கு வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், அவன் மக்களையும் விட்டு நீங்கிவிடும். யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த மக்களைப் போகவிடாதபடி பார்வோனாகிய நீர் மீண்டும் வஞ்சனையாய் நடக்காதிரும்” என்றான்.
30
பின்பு மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான்.
31
மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், நாட்டு மக்களையும் விட்டு நீங்கிற்று; ஒரு வண்டும் மிஞ்சியிருக்கவில்லை.
Settings