யாத்திராகமம் 3:16-22
16
“நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன்.
17
உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல்.
18
“இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள்.
19
ஆனால் வல்லமையான ஒரு கரம் எகிப்தின் அரசனைப் பலவந்தப்படுத்தினால் ஒழிய, அவன் உங்களைப் போகவிடமாட்டான் என்று எனக்குத் தெரியும்.
20
ஆதலால் நான் என் கரத்தை நீட்டி, எகிப்தியர் மத்தியில் செய்யப்போகும் எல்லா விதமான அதிசய செயல்களினால் அவர்களை வாதிப்பேன். அதன்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
21
“எகிப்தியர்கள் இந்த இஸ்ரயேல் மக்களுக்குத் தயவுகாட்டும்படி நான் செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது, வெறுங்கையுடன் போகமாட்டீர்கள்.
22
ஒவ்வொரு பெண்ணும் தன் அண்டை வீட்டாரிடமும், தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க நகைகளையும் உடைகளையும் கேட்டு வாங்கவேண்டும்; அவற்றை உங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் அணிவிக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.
Settings