யாத்திராகமம் 16:22-30
22
ஆறாம்நாளில் ஒவ்வொருவரும் ஒருவனுக்கு இரண்டு ஓமர் வீதம் இருமடங்கு உணவைச் சேர்த்தார்கள். சமுதாயத்தின் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23
அப்பொழுது மோசே அவர்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக யெகோவாவுக்குப் பரிசுத்த ஓய்வுநாளாய் இருக்கவேண்டும். எனவே, இன்றே சுடவேண்டியதை சுட்டு, அவிக்கவேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டபின் மீதியானதை காலைவரை வையுங்கள்” என்றான்.
24
மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை.
25
அப்பொழுது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைக்கே அதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இன்றைய நாள் யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாய் இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காணமாட்டீர்கள்.
26
நீங்கள் ஆறு நாட்களும் அதைச் சேர்க்கவேண்டும். ஓய்வுநாளாகிய ஏழாம் நாளிலே அது கிடைக்காது” என்றான்.
27
ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை.
28
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்திற்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்?
29
யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால்தான் ஆறாம்நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகையால் ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக்கூடாது” என்றார்.
30
எனவே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Settings