Skip to content
எஸ்தர் 3:8-15

எஸ்தர் 3:8-15

8
அதன்பின் ஆமான் அகாஸ்வேரு அரசனிடம், “உமது அரசின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்கள் கூட்டங்களில் சிதறடிக்கப்பட்டு பரந்து வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட இனமக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் மற்ற எல்லா மக்களுடைய வழக்கங்களிலுமிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. அவர்கள் அரசரின் சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறதில்லை. அவர்களைச் சகித்துக்கொண்டிருப்பது அரசரின் நலனுக்கு உகந்ததல்ல.
9
அரசர் விரும்பினால், அவர்களை அழிப்பதற்கு கட்டளையிடட்டும். அவர்களை அழிக்கும் வேலையில் ஈடுபடும் மனிதருக்கென அரச திரவிய களஞ்சியத்திற்கு நானே பத்தாயிரம் தாலந்து வெள்ளிக்காசுகளைக் கொடுக்கிறேன்” என்றான்.
10
எனவே, அரசன் தனது முத்திரை மோதிரத்தைத் தனது விரலில் இருந்து களற்றி யூதர்களின் எதிரியும், ஆகாகியனும், அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானிடத்தில் கொடுத்தான்.
11
“பணத்தை வைத்துக்கொள்; உனக்கு விரும்பியபடி அந்த மக்களுக்குச் செய்” என்று அரசன் ஆமானிடம் சொன்னான்.
12
பின்பு முதலாம் மாதம் பதிமூன்றாம் நாளில் அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள்; அவர்கள், ஒவ்வொரு மாகாணத்துக்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும், ஆமானின் கட்டளைகளையெல்லாம் எழுதினார்கள். பின் அரசனின் பிரதிநிதிகளுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், பல்வேறு மக்களின் உயர்குடி மக்களுக்கும் இதை அனுப்பினார்கள். இவை அகாஸ்வேரு அரசனின் பெயரிலேயே எழுதப்பட்டு, அவனுடைய சொந்த மோதிரத்தினாலேயே முத்திரையிடப்பட்டன.
13
அரசனின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள் மூலம் ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதத்தின் பதிமூன்றாம் நாளிலே, எல்லா யூதர்களையும் கொல்லவேண்டுமென கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், இளைஞர், முதியவர், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட எல்லோரையும் ஒரேநாளிலேயே அழிக்கவும், கொல்லவும், நாசமாக்கவும், அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையிடவும் வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
14
அந்தக் கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்பட இருந்தது. அப்படி வழங்கப்படும்போது, எல்லா நாடுகளும் அந்த நாளுக்கென ஆயத்தமாயிருக்கும்படி அவர்களுக்கு அது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது.
15
அரச கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் தூதுவர்கள் புறப்பட்டுப் போனார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டது. அரசனும் ஆமானும் குடிப்பதற்கு அமர்ந்தார்கள். ஆனால் சூசான் நகரமோ திகைப்பில் ஆழ்ந்திருந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options