Skip to content
உபாகமம் 1:1-30

உபாகமம் 1:1-30

1
மோசே யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள அரபா பாலைவனத்தில் இஸ்ரயேலர் எல்லோரிடமும் பேசினான். அப்பாலைவனம் சூப் என்னும் இடத்திற்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாபு ஆகிய இடங்களுக்கு இடையிலும் இருக்கிறது.
2
சேயீர் மலை வழியாக, ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவுக்குப் போக பதினொரு நாட்கள் செல்லும்.
3
இஸ்ரயேலரைப் பற்றி யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாற்பதாம் வருடம், பதினோராம் மாதம், முதலாம் தேதியிலே மோசே அவர்களுக்கு அறிவித்தான்.
4
இது எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்த பின்பும், அஸ்தரோத்தில் ஆட்சி செய்த பாசானின் அரசனாகிய ஓகை எத்ரேயில் தோற்கடித்த பின்பும் நடைபெற்றது.
5
யோர்தான் நதிக்குக் கிழக்கே உள்ள மோவாப் பிரதேசத்திலே மோசே இந்தச் சட்டங்களை விவரிக்கத் தொடங்கி, சொன்னதாவது:
6
நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே நமக்குச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் இந்த மலையில் தங்கியிருந்தது போதும்.
7
நீங்கள் முகாமிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டுக்குள் முன்னேறிச்செல்லுங்கள். அரபா, மலை நாடுகள், மேற்கு மலையடிவாரங்கள், தெற்கு, கரையோர நாடுகள் ஆகிய அயல்நாடுகளில் உள்ள மக்களிடம்போய், கானான் நாட்டிற்கும், லெபனோனுக்கும் பெரிய நதியான ஐபிராத்து நதிவரைக்கும் போங்கள்.
8
பாருங்கள், இப்பிரதேசத்தை நான் உங்களுக்கென்று கொடுத்திருக்கிறேன். உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கும் அவர்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கும் யெகோவா கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நாட்டிற்கு போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
9
அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது, “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கிறீர்கள்.
10
உங்கள் இறைவனாகிய யெகோவா, இன்று நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அநேகராயிருக்கும்படி, எண்ணிக்கையில் உங்களை அதிகரிக்கச் செய்தார்.
11
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களை இன்னும் ஆயிரம் மடங்காகப் பெருகப்பண்ணி, தாம் வாக்களித்தபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக!
12
ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி?
13
ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
14
அப்பொழுது நீங்கள், “நீர் முன்வைத்த யோசனை நல்லது” என்று பதிலளித்தீர்கள்.
15
எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்கள்மேல் தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துபேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன்.
16
அப்பொழுது நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு நியாயமாக நீதி வழங்குங்கள். அந்த வழக்கு இஸ்ரயேல் சகோதரருக்கு இடையில் இருந்தாலும், ஒரு இஸ்ரயேலனுக்கும், ஒரு அந்நியனுக்கும் இடையில் இருந்தாலும் நியாயமாய் நீதி வழங்குங்கள்.
17
நீதி வழங்குவதில் பட்சபாதம் காட்டாதீர்கள்; பெரியவர்களையும் சிறியவர்களையும் ஒரேவிதமாய் விசாரணைசெய்யுங்கள். எந்த மனிதனுக்கும் பயப்படவேண்டாம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு இறைவனுக்கே உரியது. உங்களுக்குக் கடினமாய் உள்ள வழக்குகளையோ என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை நான் விசாரிப்பேன்” என்றேன்.
18
அக்காலத்தில் நீங்கள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன்.
19
பின்பு, நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்குபோய் காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
20
அப்பொழுது நான் உங்களுக்கு, “நம் இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டிற்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள்.
21
பாருங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த நாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் முற்பிதாக்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் போய் அந்த நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள். பயப்படவேண்டாம்; கலங்கவேண்டாம்” என்றேன்.
22
அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, “நாம் அங்கு போவதற்குமுன் அந்நாட்டை உளவுபார்க்க சில மனிதர்களை அனுப்புவோம். நாம் செல்லும் வழியையும், நாம் போய்ச் சேரவேண்டிய பட்டணங்களையும் பற்றிய விவரங்களையும் அவர்கள் கொண்டுவரட்டும்” என்றீர்கள்.
23
நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக உங்களிலிருந்து பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.
24
அவர்கள் புறப்பட்டு மலைநாட்டிற்கு ஏறிப்போய், அங்கிருந்து எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு வந்து நாட்டை ஆராய்ந்தார்கள்.
25
அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டுவந்து, “நமது இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விவரம் சொன்னார்கள்.
26
அப்படியிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதற்றவர்களாய், உங்களுடைய இறைவனாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள்.
27
நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முறுமுறுத்து, “யெகோவா எங்களை வெறுக்கிறார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.
28
நாங்கள் எங்கே போவது? எங்கள் சகோதரர் எங்களை மனந்தளரப் பண்ணிவிட்டார்களே. ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரான அரக்கரையும் அங்கே கண்டோம்,’ என்கிறார்கள்” என்று சொன்னீர்கள்.
29
அப்பொழுது நான் உங்களிடம், “திகிலடையவேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம்.
30
உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்ததுபோல, உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் இந்த இடத்தை வந்து சேரும்வரை,
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options