2 இராஜாக்கள் 25:8-21
8
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், ஏழாம்நாளில், பாபிலோன் அரசனின் அதிகாரியும், பேரரசின் மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்.
9
அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான்.
10
பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது.
11
காவல் தளபதி நேபுசராதான் பட்டணத்தில் மீந்திருந்தவர்களையும், பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்கள் கூட்டத்தினரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
12
ஆனால் அந்த மெய்க்காவல் தளபதி மிகவும் ஏழைகளான சிலரை திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக விட்டுச்சென்றான்.
13
கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
14
அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
15
மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
16
யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன.
17
ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமுள்ளதாயிருந்தது. ஒரு தூணிலிருந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட கும்பம் நாலரை அடி உயரமுள்ளதும், வெண்கலத்தினாலான பின்னல் வேலைப்பாட்டினாலும், மாதுளம் பழங்களினாலும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாயும் இருந்தது. மற்ற தூணும் அதன் வேலைப்பாடுகளும் இதையே ஒத்திருந்தது.
18
மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது ஆசாரியனான செப்பனியாவையும் மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான்.
19
மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில், இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஐந்து அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான்.
20
தளபதியான நேபுசராதான், இவர்களை ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோனான்.
21
அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள்.
Settings