2 நாளாகமம் 2:3-10
3
சாலொமோன் தீருவின் அரசன் ஈராமுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். அதில், “நீர் எனது தகப்பன் தாவீது கேட்டபோது, அவர் குடியிருக்க அரண்மனை கட்டுவதற்கு கேதுரு மரங்களை அனுப்பினீர், அதுபோல் எனக்கும் கேதுரு மரங்களை அனுப்பும்.
4
நான் யெகோவாவாகிய என் இறைவனின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டி, அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்கு நறுமண தூபங்காட்டுவதற்கும், பரிசுத்த அப்பங்களை வைப்பதற்கும் ஒவ்வொரு காலையிலும், மாலையிலும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், எங்கள் இறைவனாகிய யெகோவா நியமித்த பண்டிகை நாட்களிலும் தகன காணிக்கைகளைச் செலுத்துகிறதற்கும் அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறேன். இக்காணிக்கைகள் இஸ்ரயேலுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கிறது.
5
“நான் கட்டப்போகிற ஆலயம் மேன்மையுடையதாய் இருக்கும். ஏனெனில் எங்கள் இறைவன் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மேலானவர்.
6
வானங்களும் வானாதி வானங்களும் அவரை உள்ளடக்க முடியாதிருக்க அவருக்கு ஆலயத்தைக் கட்டக்கூடியவன் யார்? அப்படியிருக்க அவருக்கு முன்பாகத் தகனபலியிட ஒரு இடத்தை கட்டுவதைத்தவிர அவருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்கு நான் யார்?
7
“எனவே தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், ஊதா, கருஞ்சிவப்பு, நீலம் ஆகிய நூலினால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், செதுக்கு வேலைசெய்வதில் அனுபவமுள்ளவனுமான ஒருவனை அனுப்பும். அவன் யூதாவிலும் எருசலேமிலும் எனது தந்தை தாவீது நியமித்திருக்கிற திறமையுள்ள தொழிலாளிகளுடன் சேர்ந்து வேலைசெய்யட்டும்.
8
“அத்துடன் நீர் எனக்கு லெபனோனிலிருந்து கேதுரு, தேவதாரு, அல்மக் வாசனை மரங்களையும் அனுப்பிவையும். ஏனெனில் அங்கே உள்ள உமது மனிதர் மரம் வெட்டுவதில் திறமையுள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது மனிதர்களும் அவர்களுடன் வேலை செய்வார்கள்.
9
அவர்கள் எனக்கு ஏராளமான வெட்டிய மரத்துண்டுகளைக் கொடுப்பார்கள். ஏனெனில் நான் கட்டப்போகும் ஆலயம் மிகப்பெரியதாயும், கெம்பீரமானதாயும் இருக்கவேண்டும்.
10
நான் மரங்களை வெட்டும் உமது வேலையாட்களுக்கு 3,000 டன் அளவுள்ள கோதுமை, 3,000 டன் வாற்கோதுமை, 20,000 குடம் திராட்சை இரசம், 20,000 குடம் ஒலிவ எண்ணெய் ஆகியவற்றைக் கொடுப்பேன்” என்றிருந்தது.
Settings