Skip to content
1 சாமுயேல் 6:13-21

1 சாமுயேல் 6:13-21

13
அப்பொழுது பெத்ஷிமேஷின் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்த்து பெட்டியைக் கண்டபோது, அக்காட்சியால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
14
வண்டி பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவா என்பவனது வயலுக்கு வந்ததும் அங்கே ஒரு பெரிய கற்பாறையருகே நின்றது. அந்த மக்கள் வண்டியின் மரத்தை வெட்டி அதைக்கொண்டு அந்த பசுக்களை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தினார்கள்.
15
லேவியர் யெகோவாவின் பெட்டியையும் அதனோடு வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்களுள்ள பெட்டியையும் எடுத்து அந்தப் பெரிய பாறைமேல் வைத்தார்கள். பெத்ஷிமேஷின் மக்களும் அன்றையதினம் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தினார்கள்.
16
இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களும் அன்றைய தினமே எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.
17
அஸ்தோத், காசா, அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய ஒவ்வொரு பட்டணத்திற்கும் ஒவ்வொன்றாக பெலிஸ்தியரால் யெகோவாவுக்கு குற்றநிவாரணக் காணிக்கையாக தங்கத்தாலான கட்டிகள் அனுப்பப்பட்டன.
18
தங்கத்தினாலான எலிகளின் எண்ணிக்கை, ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களின் ஆட்சிக்குட்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அரணான பட்டணங்களும் அதைச் சூழ்ந்த கிராமங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அவர்கள் யெகோவாவின் பெட்டியை வைத்த அந்த பெரிய கற்பாறை பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவாவின் வயலில் இன்றுவரை சாட்சியாக இருக்கிறது.
19
பெத்ஷிமேஷின் மனிதர் யெகோவாவின் பெட்டிக்குள் இருப்பதைத் திறந்து பார்த்தபடியால், இறைவன் சிலரை அடித்தால், அவர்களில் எழுபதுபேர் மடிந்தனர். யெகோவா தங்களுக்குக் கொடுத்த கடுந்தண்டனையைக் கண்டதால், அவர்கள் துக்கங்கொண்டாடினார்கள்.
20
அப்பொழுது பெத்ஷிமேஷின் மனிதர், “இந்தப் பரிசுத்த இறைவனாகிய யெகோவா முன்னிலையில் நிற்கத்தக்கவன் யார்? இங்கிருந்து இந்தப் பெட்டி யாரிடம் போகும்?” என்று கேட்டார்கள்.
21
“பெலிஸ்தியர் யெகோவாவின் பெட்டியைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி அவர்கள் கீரியாத்யாரீமின் மக்களிடத்திற்கு தூதுவரை அனுப்பினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options