Skip to content
1 சாமுயேல் 6:1-12

1 சாமுயேல் 6:1-12

1
யெகோவாவின் பெட்டி பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.
2
பெலிஸ்தியர் தங்கள் பூசாரிகளையும் குறிசொல்பவர்களையும் வரவழைத்து, “யெகோவாவின் பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை அது இருந்த இடத்திற்கு எப்படி அனுப்பலாமென்று சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
3
அதற்கு அவர்கள், “இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை அனுப்புவதாயின் அதை வெறுமையாய் அனுப்பாமல், அதனோடு குற்றநிவாரண காணிக்கையையும் அவருக்கு அனுப்புங்கள். அப்பொழுது நீங்கள் குணமாவீர்கள், அன்றியும் அவருடைய தண்டனையின் கரம் உங்களைவிட்டு நீங்காதிருந்த காரணத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றார்கள்.
4
அதற்குப் பெலிஸ்தியர், “நாங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்கு எதை அனுப்பலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “உங்களுக்கும் உங்கள் தலைவர்களுக்கும் ஒரே வாதை உண்டானதால், பெலிஸ்தியரின் ஆளுநர்களின் எண்ணிக்கைப்படி தங்கத்தினால் கட்டி வடிவத்தில் ஐந்து உருவங்களையும் ஐந்து எலிகளையும் செய்து அவற்றை அனுப்புங்கள்.
5
இவ்விதமான கட்டிகளின் மாதிரிகளையும், நாட்டை அழிக்கும் எலிகளின் மாதிரிகளையும் செய்து, இஸ்ரயேலின் தெய்வத்தைக் கனப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிலிருந்தும், உங்கள் தெய்வங்களிருந்தும், உங்கள் நாட்டிலிருந்தும் தமது தண்டனை கரத்தை எடுத்துவிடுவார்.
6
எகிப்தியரும், பார்வோனும் செய்ததுபோல் நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்கள். இறைவன் அவர்களை கடுமையாய் நடத்தியபோது, இஸ்ரயேலரை அவர்களுடைய வழியில் போகும்படி அவர்கள் அனுப்பிவிடவில்லையா?
7
“இப்பொழுது நீங்கள் புதிய வண்டி ஒன்றையும், இதுவரை நுகத்தடி பூட்டப்படாத இரண்டு கறவைப்பசுக்களையும் ஆயத்தப்படுத்துங்கள். பசுக்களை அதில் பூட்டுங்கள். அதன் கன்றுகளைப் பிரித்துக் கொண்டுபோய் தொழுவத்தில் விடுங்கள்.
8
யெகோவாவின் பெட்டியை எடுத்து, வண்டியின்மேல் வையுங்கள். குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தும் தங்கத்தாலான பொருட்களை ஒரு பெட்டியில் அதன் பக்கத்தில் வைத்து வண்டியைப் போகும்படி விடுங்கள்.
9
ஆனால் அதைக் கவனித்துக் கொண்டிருங்கள். அது தன் சொந்த பிரதேசத்திற்கு பெத்ஷிமேஷை நோக்கிப் போனால், அப்பொழுது இந்தப் பேராபத்தை நமக்குச் செய்தவர் யெகோவாவே. அப்படி போகாவிட்டால், அவருடைய கை எங்களை அழிக்கவில்லை. அது தற்செயலாய் சம்பவித்தது என்று அறிந்துகொள்வோம்” என்றார்கள்.
10
அப்படியே அவர்கள் செய்தார்கள். இரண்டு கறவைப்பசுக்களை கொண்டுவந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தார்கள்.
11
பின்பு யெகோவாவின் பெட்டியை வண்டியில் வைத்துத் தங்கத்தினால் செய்த எலிகளையும், கட்டி உருவங்களின் மாதிரிகளை வைத்த பெட்டியையும் வைத்தார்கள்.
12
அப்பொழுது அந்தப் பசுக்கள் வழிநெடுகிலும் கத்திக்கொண்டே பெத்ஷிமேஷை நோக்கி வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பாமல், நேரே சென்றன. பெலிஸ்தியரின் ஆளுநர்களும் பெத்ஷிமேஷின் எல்லைவரை அவைகளின் பின்னே சென்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options