யோபு26
Listen to this chapter
0:00
0:00
1
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2
“பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்? தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்?
3
ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி, சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்?
4
இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்? யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?
5
“தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும், இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன.
6
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது.
7
இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார், அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார்.
8
அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார், ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை.
9
அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து, அதை மூடிவைக்கிறார்.
10
அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார்.
11
வானத்தின் தூண்கள், அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன.
12
அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார்.
13
அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.
14
இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே; அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note