நீதிமொழிகள் 28:19-28
19
தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை வீணடிப்பவர்களோ, அதிக வறுமையில் வாடுவார்கள்.
20
உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்.
21
பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல, ஆனாலும் சிலர் ஒரு சிறு அப்பத்துண்டிற்காகவும் அநியாயம் செய்வார்கள்.
22
பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள்.
23
தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள்.
24
தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, “அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள் அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள்.
25
பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள்.
26
தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
27
ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை, ஆனால் ஏழைகளின் தேவைகளை கவனிக்காதவர்கள் அநேக சாபங்களைப் பெறுவார்கள்.
28
கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அழியும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.
Settings