எண்ணாகமம் 6:1-12
1
யெகோவா மோசேயுடன் பேசி,
2
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: ஒரு ஆணோ, பெண்ணோ நசரேய விரதத்தின் மூலம் தங்களை யெகோவாவுக்கு வேறுபிரிக்கும் விசேஷ நேர்த்தி செய்யவிரும்பினால்,
3
அவர்கள் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ குடிக்காமல் தவிர்க்கவேண்டும். அத்துடன் திராட்சை இரசத்திலிருந்தோ, வேறு எவ்வகையான மதுபானத்திலிருந்தோ செய்யப்பட்ட புளித்த காடியையும் குடிக்கக்கூடாது. அத்துடன் அவர்கள் திராட்சைப் பழச்சாற்றையும் குடிக்கக்கூடாது. திராட்சைப் பழங்களையோ, திராட்சை வற்றலையோ சாப்பிடவும் கூடாது.
4
அவ்வாறு அவன் நசரேய விரதத்தினால் பிரிந்திருக்கும்வரை திராட்சையிலிருந்து வரும் ஒன்றையும், அதாவது அதன் விதை, தோல் எதையுமே சாப்பிடக்கூடாது.
5
“ ‘அவ்வாறு வேறுபிரிந்திருப்பதற்காக நேர்த்திக்கடன் செய்திருக்கும் காலம் முழுவதும் அவனுடைய தலையில் சவரக்கத்தி படக்கூடாது. தன்னை யெகோவாவுக்காக வேறுபிரித்துக்கொண்ட காலம் முடியும்வரை, அவன் பரிசுத்தமாகவே இருக்கவேண்டும். அவன் தன் தலைமயிரையும் நீளமாக வளரவிடவேண்டும்.
6
“ ‘தன்னை யெகோவாவுக்காக வேறுபிரித்துக்கொண்ட காலத்தில், செத்த உடலின் அருகில் அவன் போகக்கூடாது.
7
அவன் தன் சொந்தத் தகப்பனோ, தாயோ, சகோதரனோ, சகோதரியோ இறந்தாலும், சம்பிரதாய முறைப்படி அந்த உடலின் அருகில் போய் தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது. ஏனெனில், அவன் இறைவனுக்காக தன்னை வேறுபிரித்துக்கொண்ட அடையாளச்சின்னம் அவன் தலையின்மேல் இருக்கிறது.
8
அவன் தன்னை வேறுபிரித்திருக்கும் காலம் முழுவதும் அவன் யெகோவாவுக்காக அர்ப்பணம் செய்தவனாயிருக்கிறான்.
9
“ ‘ஆனால் யாராவது ஒருவன் அவன் முன்னிலையில் திடீரென இறந்து, அதனால் அவன் அர்ப்பணம் செய்திருந்த அவனுடைய தலைமயிரை அசுத்தப்படுத்தினால், தன் சுத்திகரிப்பின் நாளான ஏழாம் நாளிலே அவன் தன் தலைமயிரைச் சவரம் செய்துகொள்ள வேண்டும்.
10
அவன் எட்டாம் நாளில் இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
11
அவன் செத்த உடலருகில் இருந்ததினால் பாவம் செய்தபடியால், ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், மற்றொன்றை அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்குத் தகன காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். அதே நாளிலேயே அவன் தலையையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்.
12
அவன் தன்னை வேறுபிரித்துக்கொண்ட காலத்திற்கு என தன்னைத் திரும்பவும் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்து, குற்றநிவாரண காணிக்கையாக ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டியைக் கொண்டுவர வேண்டும். அவன் தன்னை வேறுபிரித்துக்கொண்ட காலத்தில் அசுத்தமடைந்தபடியினால், அதற்கு முந்தின நாட்கள் கணக்கிடப்படுவதில்லை.
Settings