எண்ணாகமம் 23:1-12
1
பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே எனக்காக ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஆயத்தப்படுத்து” என்றான்.
2
பிலேயாம் சொன்னதுபோலவே பாலாக் செய்தான். அவர்கள் இருவரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலியிட்டார்கள்.
3
பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “நீ உன் காணிக்கைக்கு அருகில் நில். நான் அப்பால் போகிறேன். ஒருவேளை யெகோவா என்னைச் சந்திக்கவரலாம். அவர் எனக்கு எதை வெளிப்படுத்துகிறாரோ அதை நான் உனக்குச் சொல்வேன்” என்று சொல்லி அவன் ஒரு வறண்ட மேட்டை நோக்கிப் போனான்.
4
அங்கே இறைவன் பிலேயாமைச் சந்தித்தார். பிலேயாம் யெகோவாவிடம், “நான் ஏழு பலிபீடங்களை உண்டுபண்ணி ஒவ்வொன்றிலும் ஒரு காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
5
அப்பொழுது யெகோவா பிலேயாமின் வாயில் ஒரு செய்தியைக் கொடுத்து, “நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இந்தச் செய்தியை அவனுக்குச் சொல்” என்றார்.
6
பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிவந்து, அவன் மோவாப் தலைவர்களுடன் தன் காணிக்கைக்கு அருகே நிற்பதைக் கண்டான்.
7
அங்கே பிலேயாம் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: “பாலாக் என்னை ஆராமிலிருந்து கொண்டுவந்தான், மோவாபின் அரசன் கிழக்கு மலைகளிலிருந்து கொண்டுவந்தான். ‘வா,’ எனக்காக யாக்கோபைச் ‘சபி; வந்து இஸ்ரயேலைப் பகிரங்கமாகக் குற்றப்படுத்து’ என்றான்.
8
இறைவன் சபிக்காதவர்களை நான் எப்படி சபிக்கலாம்? யெகோவா பகிரங்கமாய்க் குற்றப்படுத்தாதவர்களை நான் எப்படிக் குற்றப்படுத்தலாம்?
9
கற்பாறை உச்சியிலிருந்து நான் அவர்களைக் காண்கிறேன்; மேடுகளிலிருந்து நான் அவர்களைப் பார்க்கிறேன். அங்கே தங்களை வேறு நாடுகளிலிருந்து வேறுபிரித்துக்கொண்டு தனியாக வாழ்கிற மக்களைக் காண்கிறேன்.
10
யாக்கோபின் புழுதியை யாரால் எண்ண முடியும்? இஸ்ரயேலின் காற்பங்கை யாரால் கணக்கிட முடியும்? நேர்மையானவர்கள் இறப்பது போலவே நானும் இறக்கவேண்டும்; அவர்களுடைய முடிவைப்போலவே என் முடிவும் இருக்கட்டும்.”
11
அப்பொழுது பாலாக் பிலேயாமிடம், “நீ எனக்கு என்ன செய்தாய்? நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னைக் கொண்டுவந்தேன். ஆனால் நீயோ, அவர்களை ஆசீர்வதிக்கிறாயே அல்லாமல் வேறெதையும் செய்யவில்லையே” என்றான்.
12
அதற்கு பிலேயாம், “யெகோவா எனக்குச் சொல்லும்படி வாயில் கொடுக்கிறதை நான் பேச வேண்டாமோ?” என்றான்.
Settings