Skip to content
எண்ணாகமம் 18:8-20

எண்ணாகமம் 18:8-20

8
பின்னும் யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “எனக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகளுக்குப் பொறுப்பாக நானே உன்னை வைத்திருக்கிறேன். இஸ்ரயேலர் எனக்காகக் கொடுக்கும் பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும் உனக்கும், உன் மகன்களுக்கும், உங்கள் பங்காகவும், நிரந்தர பாகமாகவும் கொடுக்கிறேன்.
9
மகா பரிசுத்த காணிக்கைகளில் நெருப்பில் எரிக்கப்படாத அந்தப் பங்கு உனக்குச் சேரவேண்டும். தானிய காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை எதுவானாலும் சரி, அவர்கள் மகா பரிசுத்தமான காணிக்கையாகக் கொண்டுவரும் எல்லா கொடைகளிலுமிருந்து எரிக்கப்படாத அப்பங்கு உனக்கும், உன் மகன்களுக்கும் சொந்தமாகும்.
10
அதை மகாபரிசுத்தமானதாக எண்ணி; அவற்றைச் சாப்பிடவேண்டும். ஒவ்வொரு ஆணும் அதைச் சாப்பிடவேண்டும். நீ அதைப் பரிசுத்தமானதாக மதிக்கவேண்டும்.
11
“இஸ்ரயேலருடைய காணிக்கைகளின் கொடைகள் எல்லாவற்றிலுமிருந்து பிரித்து வைக்கப்படும் எதுவும் உங்களுக்கே உரியது. நான் இதை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும், உன் வழக்கமான பங்காகக் கொடுக்கிறேன். உன் வீட்டில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.
12
“இஸ்ரயேலர் தங்கள் அறுவடையின் முதற்பலனாக யெகோவாவுக்குக் கொடுக்கும் சிறந்த ஒலிவ எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் நான் உனக்குக் கொடுத்தேன்.
13
அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டுவரும் நாட்டின் முதற்பலன் முழுவதும் உனக்குரியவை. உங்கள் குடும்பத்தில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.
14
“இஸ்ரயேலின் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே உன்னுடையவை.
15
யெகோவாவுக்காக கொண்டுவரப்படும் கர்ப்பத்தின் முதற்பேறான பிள்ளையும், மிருகமும் உன்னுடையவைகளே. ஆனால் ஒவ்வொரு முதற்பேறான மகனையும், அசுத்தமான மிருகங்களின் ஆண் தலையீற்றையும் நீ மீட்கவேண்டும்.
16
அவை ஒரு மாதமானவுடன், பரிசுத்த இடத்தின் சேக்கல் மதிப்பின்படி மீட்பின் கிரயமான ஐந்து சேக்கலைப் பெற்றுக்கொண்டு, நீ அவற்றை மீட்கவேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
17
“ஆனாலும், தலையீற்றான மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றை நீ மீட்கக்கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து அவற்றின் கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாய், நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரித்துவிடு.
18
அசைவாட்டும் காணிக்கையான நெஞ்சுப்பகுதியும், வலதுதொடையும் உன்னுடையவையாய் இருப்பதுபோல், அவற்றின் இறைச்சியும் உனக்கே உரியது.
19
இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் கொண்டுவரும் பரிசுத்த காணிக்கைகளிலிருந்து பிரித்து எடுக்கும் எதையும் நான் உனக்கும், உன் மகன்களுக்கும், மகள்களுக்கும், உங்களுடைய நிரந்தர பாகமாகக் கொடுக்கிறேன். இது யெகோவாவுக்கு முன்பாக உனக்காகவும், உன் சந்ததியினருக்காகவும் உப்பினால் செய்யப்படும் ஒரு நிரந்தர உடன்படிக்கையாய் இருக்கும்” என்றார்.
20
பின்பு யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “உனக்கு அவர்கள் நாட்டில் உரிமைச்சொத்து இருக்காது. அவர்கள் மத்தியில் உனக்கு எந்தவித பங்கும் இருக்காது. இஸ்ரயேலர் மத்தியில் நானே உனது பங்கும், உரிமைச்சொத்துமாயிருக்கிறேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options