Skip to content
எண்ணாகமம் 15:22-31

எண்ணாகமம் 15:22-31

22
“ ‘யெகோவா மோசேக்குக் கொடுத்த கட்டளைகளில் எதையாவது நீங்கள் தற்செயலாகக் கைக்கொள்ளத் தவறக்கூடும்.
23
அது மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையாகவும், அது யெகோவா கொடுத்த நாளிலிருந்து வரப்போகும் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளையாகவும் இருக்கலாம்.
24
தவறி மக்கள் சமுதாயத்திற்குத் தெரியாமல் தற்செயலாகச் செய்யப்பட்டிருக்கலாம். அப்பொழுது மக்களின் முழு சமுதாயமும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாக ஒரு இளம்காளையைச் செலுத்தவேண்டும். அத்துடன் அதற்குரிய தானிய காணிக்கையையும், பானகாணிக்கையையும், பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
25
ஆசாரியன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில் அது தற்செயலாகச் செய்யப்பட்ட பாவமாகையாலும், அவர்கள் யெகோவாவுக்கு தங்களுடைய குற்றத்திற்காக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையையும் ஒரு பாவநிவாரண காணிக்கையையும் கொண்டுவந்திருந்தபடியாலும் அவர்கள் பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
26
முழு இஸ்ரயேல் சமுதாயமும், அவர்களில் வாழும் அந்நியர்களும் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில், எல்லா மக்களும் தற்செயலாக செய்யப்பட்ட குற்றத்திலேயே சம்பந்தப்பட்டார்கள்.
27
“ ‘ஆனால் ஒருவன் மட்டும் தற்செயலாகப் பாவம்செய்தால், பாவநிவாரண காணிக்கையாக அவன் ஒரு வயதுடைய பெண் வெள்ளாட்டுக்குட்டியைக் கொண்டுவர வேண்டும்.
28
ஆசாரியன், தற்செயலாகப் பாவம் செய்ததினால் தவறுசெய்த ஒருவனுக்காக, யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபின் அவன் மன்னிக்கப்படுவான்.
29
ஊரில் பிறந்த இஸ்ரயேலனோ அல்லது அந்நியனோ தற்செயலாகப் பாவம் செய்கிற எவனுக்கும் இந்த ஒரேவிதமான சட்டத்தின்படியே செய்யப்படவேண்டும்.
30
“ ‘ஆனால் ஊரில் பிறந்தவனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும், ஒருவன் அறிந்து துணிகரமாகப் பாவம்செய்தால் அவன் யெகோவாவை நிந்திக்கிறான். ஆகையால் அம்மனிதன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
31
அவன் யெகோவாவின் வார்த்தையை அற்பமாய் எண்ணி, அவருடைய கட்டளைகளை மீறினபடியால், அம்மனிதன் நிச்சயமாக அகற்றப்படவேண்டும். அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும் என்றார்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options