எண்ணாகமம் 13:26-33
26
அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள்.
27
அவர்கள் மோசேயிடம், “நீர் அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போனோம். அது பாலும் தேனும் வழிந்தோடும் நாடு! இதோ அதன் பழங்கள்.
28
ஆனால் அங்குள்ள மக்களோ மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அத்துடன் நகரங்களும் அரணுள்ளவையும், விசாலமானவையுமாய் இருக்கின்றன. அங்கே ஏனாக்கின் சந்ததிகளைக்கூட நாங்கள் கண்டோம்.
29
அமலேக்கியர் நாட்டின் தெற்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஏத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கிறார்கள். கடல் அருகேயும், யோர்தான் நதியோரம் கானானியர் வாழ்கிறார்கள்” என்று விவரமாய்ச் சொன்னார்கள்.
30
அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், “நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றான்.
31
ஆனால் காலேப்புடன் போன மனிதர்களோ, “அந்த மக்களை எதிர்க்க நம்மால் முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களைப்பார்க்கிலும் பலசாலிகள்” என்றார்கள்.
32
அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள்.
33
அரக்கர்களின் வழிவந்த ஏனாக்கின் சந்ததிகளான அரக்கர்களையும் அங்கு கண்டோம். நாங்கள் எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்பட்டோம். அவர்களுடைய பார்வையிலும் நாங்கள் அப்படியே காணப்பட்டோம் என்றார்கள்.
Settings