நெகேமியா 13:4-14
4
இதற்கு முன்பு ஆசாரியன் எலியாசீப் எங்கள் இறைவனின் ஆலய களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தான். இவன் தொபியாவின் நெருங்கிய உறவினரான இவன்,
5
இது முற்காலத்தில் தானிய காணிக்கைகள், நறுமண தூபம், ஆலய பாத்திரங்கள், அத்துடன் லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காப்போருக்கும் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்ட தானியம், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பாகத்தையும், ஆசாரியருக்குரிய காணிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய அறையை தொபியாவுக்குக் கொடுத்திருந்தான்.
6
இந்தச் சம்பவம் நடந்தபோது நான் எருசலேமில் இருக்கவில்லை. ஏனெனில் அர்தசஷ்டா அரசனின் ஆட்சியில் முப்பத்தி இரண்டாம் வருடம் நான் பாபிலோனுக்குத் திரும்பிவிட்டேன். சிறிது காலத்தின்பின் நான் அரசனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு,
7
திரும்பி எருசலேமுக்கு வந்தேன். இறைவனுடைய ஆலயத்தின் முற்றத்திலுள்ள ஒரு அறையை எலியாசீப் தொபியாவுக்குக் கொடுத்து செய்திருந்த தீமையான செயலை நான் கண்டுபிடித்தேன்.
8
நான் மிகவும் கோபமடைந்து தொபியாவின் வீட்டுப் பொருட்களையெல்லாம் வெளியே எறிந்தேன்.
9
அத்துடன் நான் அந்த அறைகளை தூய்மைப்படுத்தும்படி உத்தரவிட்டேன்; இறைவனுடைய ஆலயப் பாத்திரங்களையும், தானிய காணிக்கைகளையும், நறுமண தூபங்களையும் திரும்பவும் அறைக்குள்ளே கொண்டுவந்தேன்.
10
அதோடு லேவியருக்குரிய பங்குகள் அவர்களுக்குக் கொடுக்கப்படாதிருந்ததையும் அறிந்தேன்; இதனால், ஆலய பணிக்குப் பொறுப்பாயிருந்த எல்லா லேவியரும், பாடகர்களும் தங்கள் வயல்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அறிந்துகொண்டேன்.
11
நான் அதிகாரிகளைக் கடிந்துகொண்டு, “இறைவனுடைய ஆலயம் இவ்வாறு உதாசீனப்படுத்தப்பட்டது ஏன்?” என்று அவர்களைக் கேட்டேன். அப்பொழுது நான் அவர்களைத் திரும்பவும் ஒன்றாய் அழைத்து, அவர்களுக்குரியதான கடமைகளில் அவர்களை அமர்த்தினேன்.
12
இதனால் திரும்பவும் யூதர்கள் யாவரும் ஆலயக் களஞ்சிய அறைக்குத் தங்கள் தானியங்கள், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டுவந்தார்கள்.
13
ஆசாரியனான செலேமியாவையும், வேதபாரகனான சாதோக்கையும், பெதாயா எனப் பெயரிடப்பட்டிருந்த லேவியனையும் களஞ்சிய அறைக்குப் பொறுப்பாக வைத்து, இவர்களுக்கு உதவியாளனாக ஆனானை நியமித்தேன். இவன் மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன். ஏனெனில் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரருடைய தேவைகளைப் பங்கிடுவதற்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
14
என் இறைவனே, நான் என் இறைவனுடைய ஆலயத்துக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உண்மையாய்ச் செய்த எல்லாவற்றையும் நீக்கிப் போடாமல், இதற்காக என்னை நினைத்தருளும்.
Settings