மீகா 6:9-16
9
கேளுங்கள், யெகோவா எருசலேம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறார். அவருடைய பெயருக்குப் பயந்து நடப்பதே ஞானம். “வரப்போகும் தண்டனையின் கோலையும், அதை நியமித்தவரையும் கவனத்திற்கொள்ளுங்கள்.
10
கொடுமையானவர்களின் வீடே, நீங்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த சொத்துக்களையும், நீங்கள் பயன்படுத்துகிறதான மற்றவர்களை ஏமாற்றும் அளவையையும் நான் இன்னும் மறக்கவேண்டுமோ?
11
போலித் தராசையும், போலிப் படிக்கற்கள் இருக்கும் பையையும் வைத்திருக்கிறவனையும் நான் குற்றமற்றவனெனத் தீர்க்கவேண்டுமோ?
12
உன் செல்வந்தர்கள் வன்முறையாளர்கள். உன் மக்கள் பொய்யர்கள். அவர்களுடைய நாவுகள் வஞ்சகத்தையே பேசுகின்றன.
13
அதனாலேதான் நான் உன்னை அழிக்கத் தொடங்கிவிட்டேன். உன் பாவங்களுக்காக உன்னைப் பாழாக்கத் தொடங்கிவிட்டேன்.
14
நீ சாப்பிடுவாய்; ஆனால் திருப்தியடையமாட்டாய். உன் வயிறோ இன்னும் வெறுமையாகவே இருக்கும். நீ சேர்த்து வைப்பாய்; ஆனால் சேமிக்கமாட்டாய். ஏனெனில் உன் சேமிப்புகளை எல்லாம் நான் வாளுக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15
நீ விதைப்பாய்; ஆனால் அறுவடை செய்யமாட்டாய். நீ ஒலிவ விதைகளைப் பிழிந்தெடுப்பாய்; ஆனால் எண்ணெயையோ பூசிக்கொள்ளமாட்டாய். திராட்சைப் பழங்களையும் நீ பிழிவாய்; ஆனால் இரசத்தையோ நீ குடிக்கமாட்டாய்.
16
உம்ரி அரசனின் நியமங்களையும் ஆகாப் வீட்டாரின் கேடான நடைமுறைகளையும் கைக்கொண்டு, அவர்களின் தீமையான சம்பிரதாய முறைகளையே நீ பின்பற்றினாய். ஆதலால் நான் உன்னை அழிவுக்கும், உன் மக்களை ஏளனத்துக்கும் ஒப்புக்கொடுப்பேன். பிறநாடுகளின் ஏளனத்தை நீ சுமப்பாய்.”
Settings