லூக்கா 18:18-23
18
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19
அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே.
20
‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
21
அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
22
இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
23
அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.
Settings