Skip to content
லூக்கா 14:16-24

லூக்கா 14:16-24

16
இயேசு அதற்கு மறுமொழியாக சொன்னதாவது: “ஒருவன் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, பல விருந்தினர்களை அழைத்திருந்தான்.
17
விருந்துக்கான வேளை வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி தனது வேலைக்காரனை அனுப்பினான்.
18
“ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்பொழுதுதான் நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
19
“வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
20
“மற்றவனோ, ‘நான் இப்பொழுதுதான் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என்னால் வரமுடியாது’ என்றான்.
21
“அந்த வேலைக்காரன் திரும்பிவந்து, தனது எஜமானுக்கு நடந்தவற்றைச் சொன்னான். அப்பொழுது, அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப்போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சந்துகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் கூட்டிக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.
22
“அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால், இன்னும் இடம் இருக்கிறது’ என்றான்.
23
“அப்பொழுது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப்போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும்.
24
நான் உனக்குச் சொல்கிறேன், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் எனது விருந்தை சுவைக்கமாட்டான்’ என்றான்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options