லேவியராகமம் 8:14-30
14
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக, ஒரு காளையை அவன் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தார்கள்.
15
மோசே அந்தக் காளையை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். இவ்விதமாக பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்தான்.
16
மேலும் மோசே, உள்ளுறுப்புகளைச் சுற்றியிருந்த கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியிருந்த கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதில் இருந்த கொழுப்பையும் எடுத்து அவற்றைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
17
ஆனால் மோசே வெட்டப்பட்ட காளையை தோலுடனும், அதன் இறைச்சியுடனும், அதன் குடல்களுடனும் முகாமுக்கு வெளியே எரித்தான். இவற்றை யெகோவா கட்டளையிட்டபடியே செய்தான்.
18
அதன்பின், தகன காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
19
அப்பொழுது அந்தக்கடா கொல்லப்பட்டது, மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
20
மோசே அந்தக்கடாவை துண்டங்களாக வெட்டி தலையையும், துண்டங்களையும் கொழுப்பையும் எரித்தான்.
21
அவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரினால் கழுவி, முழு கடாவையும் பலிபீடத்தின்மேல் தகன காணிக்கையாக எரித்தான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் எரிக்கப்படும் ஒரு காணிக்கையாக இருந்தது. இவற்றை மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
22
பின்பு மோசே அர்ப்பணிப்புக்கான மற்ற செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23
மோசே அந்த செம்மறியாட்டுக் கடாவை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசினான்.
24
ஆரோனுடைய மகன்களையும் மோசே முன்பாக அழைத்துவந்து, இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து அவர்களின் வலது காது மடல்களிலும், வலதுகை பெருவிரல்களிலும், வலதுகால் பெருவிரல்களிலும் பூசினான். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
25
மோசே கொழுப்பையும், கொழுத்த வாலையும், உள்ளுறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது தொடையையும் எடுத்தான்.
26
பின்பு அவன் யெகோவா முன்வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து, ஒரு அடை அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துச் சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்து, அக்கொழுப்புகளின்மேலும், வலது தொடையின்மேலும் வைத்தான்.
27
அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்களின் கைகளிலும் கொடுத்து யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
28
மோசே அவைகளை அவர்களின் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தில் இருந்த காணிக்கையின்மேல் அதை அர்ப்பணிப்பு காணிக்கையாக எரித்தான். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையாக இருந்தது.
29
அர்ப்பணிப்பு காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவில், மோசே தன் பங்கான நெஞ்சுப்பகுதியை எடுத்து, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். இவற்றை யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
30
பின்பு மோசே, அபிஷேக எண்ணெயில் கொஞ்சமும், பலிபீடத்திலிருந்து சிறிது இரத்தத்தையும் எடுத்து, ஆரோனின்மேலும், அவன் உடையின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளித்தான். இவ்வாறு ஆரோனையும், அவனுடைய உடைகளையும், அவன் மகன்களையும், அவர்களுடைய உடைகளையும் அர்ப்பணம் செய்தான்.
Settings