Zum Inhalt springen
லேவியராகமம் 8:1-33

லேவியராகமம் 8:1-33

1
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
2
“நீ ஆரோனையும் அவன் மகன்களையும் அவர்களுடைய உடைகளுடனும், அபிஷேக எண்ணெயுடனும் கொண்டுவா. அத்துடன் பாவநிவாரண காணிக்கைக்கான காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையையும் கொண்டுவா.
3
முழு சபையையும் சபைக்கூடார வாசலில் கூடிவரச்செய்” என்றார்.
4
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். சபையாரும் சபைக்கூடார வாசலில் ஒன்றுகூடினார்கள்.
5
மோசே சபையைப் பார்த்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்டது இதுவே” என்றான்.
6
பின்பு மோசே ஆரோனையும் அவன் மகன்களையும் சபைக்கு முன்பாக அழைத்துவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவினான்.
7
அவன் ஆரோனுக்கு உள்ளுடையை உடுத்தி, இடுப்பில் இடைப்பட்டியைக் கட்டி, மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் போட்டான். திறமையாக, அழகாகப் பின்னப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டினான். இவ்வாறாக, அது அவன்மேல் கட்டப்பட்டது.
8
பின்பு மார்பு அணியை அவனுக்குப் போட்டு, அந்த மார்பு அணியிலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்தான்.
9
பின்பு அவன் தலைப்பாகையை ஆரோனின் தலையில் வைத்து, அதன் முன்பக்கத்தில் பரிசுத்த மகுடமான தங்கப்பட்டியை வைத்தான். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் செய்தான்.
10
பின்பு மோசே, அபிஷேக எண்ணெயை எடுத்து இறைசமுகக் கூடாரத்தையும், அதனுள் இருந்த எல்லாவற்றையும் அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான்.
11
அந்த எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும், அதிலுள்ள பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் காலையும் அர்ப்பணிக்கும்படி அபிஷேகித்தான்.
12
பின்பு ஆரோனின் தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றி, அவனை அர்ப்பணம் செய்வதற்காக அபிஷேகித்தான்.
13
மோசே ஆரோனின் மகன்களை முன்னால் கொண்டுவந்து, உள்ளுடையை உடுத்தி, இடைப்பட்டியைக் கட்டி, குல்லாக்களையும் அணிவித்தான். இவற்றை மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
14
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக, ஒரு காளையை அவன் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தார்கள்.
15
மோசே அந்தக் காளையை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். இவ்விதமாக பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்தான்.
16
மேலும் மோசே, உள்ளுறுப்புகளைச் சுற்றியிருந்த கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியிருந்த கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதில் இருந்த கொழுப்பையும் எடுத்து அவற்றைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
17
ஆனால் மோசே வெட்டப்பட்ட காளையை தோலுடனும், அதன் இறைச்சியுடனும், அதன் குடல்களுடனும் முகாமுக்கு வெளியே எரித்தான். இவற்றை யெகோவா கட்டளையிட்டபடியே செய்தான்.
18
அதன்பின், தகன காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
19
அப்பொழுது அந்தக்கடா கொல்லப்பட்டது, மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
20
மோசே அந்தக்கடாவை துண்டங்களாக வெட்டி தலையையும், துண்டங்களையும் கொழுப்பையும் எரித்தான்.
21
அவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரினால் கழுவி, முழு கடாவையும் பலிபீடத்தின்மேல் தகன காணிக்கையாக எரித்தான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் எரிக்கப்படும் ஒரு காணிக்கையாக இருந்தது. இவற்றை மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
22
பின்பு மோசே அர்ப்பணிப்புக்கான மற்ற செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23
மோசே அந்த செம்மறியாட்டுக் கடாவை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசினான்.
24
ஆரோனுடைய மகன்களையும் மோசே முன்பாக அழைத்துவந்து, இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து அவர்களின் வலது காது மடல்களிலும், வலதுகை பெருவிரல்களிலும், வலதுகால் பெருவிரல்களிலும் பூசினான். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
25
மோசே கொழுப்பையும், கொழுத்த வாலையும், உள்ளுறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது தொடையையும் எடுத்தான்.
26
பின்பு அவன் யெகோவா முன்வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து, ஒரு அடை அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துச் சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்து, அக்கொழுப்புகளின்மேலும், வலது தொடையின்மேலும் வைத்தான்.
27
அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்களின் கைகளிலும் கொடுத்து யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
28
மோசே அவைகளை அவர்களின் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தில் இருந்த காணிக்கையின்மேல் அதை அர்ப்பணிப்பு காணிக்கையாக எரித்தான். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையாக இருந்தது.
29
அர்ப்பணிப்பு காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவில், மோசே தன் பங்கான நெஞ்சுப்பகுதியை எடுத்து, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். இவற்றை யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
30
பின்பு மோசே, அபிஷேக எண்ணெயில் கொஞ்சமும், பலிபீடத்திலிருந்து சிறிது இரத்தத்தையும் எடுத்து, ஆரோனின்மேலும், அவன் உடையின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளித்தான். இவ்வாறு ஆரோனையும், அவனுடைய உடைகளையும், அவன் மகன்களையும், அவர்களுடைய உடைகளையும் அர்ப்பணம் செய்தான்.
31
பின்பு மோசே, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொன்னதாவது, “ஆரோனும், அவன் மகன்களும் சாப்பிடவேண்டும் என நான் கட்டளையிட்டபடி நீங்கள் இறைச்சியைச் சபைக்கூடார வாசலில் சமைத்து, அங்கே அர்ப்பணிப்பு காணிக்கை கூடையிலுள்ள அப்பத்துடன் சாப்பிடவேண்டும்.
32
மீதமுள்ள இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிடவேண்டும்.
33
உங்கள் அர்ப்பணிப்பு நாட்கள் முடியும்வரை ஏழுநாட்களுக்கு சபைக்கூடார வாசலைவிட்டுப் போகாதீர்கள். ஏனென்றால், உங்கள் நியமனம் ஏழு நாட்கள்வரை நீடிக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options