Skip to content
லேவியராகமம் 14:36-53

லேவியராகமம் 14:36-53

36
ஆசாரியன் பூஞ்சணத்தை பரிசோதிக்க உள்ளேபோகும் முன் அந்த வீடு வெறுமையாக்கப்பட உத்தரவிடவேண்டும். அப்பொழுது அவ்வீட்டிலுள்ள பொருட்கள் அசுத்தம் என அறிவிக்கப்படமாட்டாது. அதன்பின் ஆசாரியன் உள்ளே போய், அந்த வீட்டைப் பரிசோதனையிட வேண்டும்.
37
அவன் சுவர்களிலுள்ள பூஞ்சணத்தைப் பரிசோதிக்க வேண்டும். அங்கு சுவரின் மேற்பரப்பைவிட ஆழமான பச்சைநிற அல்லது சிவப்புநிற குழிகள் காணப்பட்டால்,
38
உடனே ஆசாரியன் வீட்டின் வாசலைவிட்டு வெளியே போய், அந்த வீட்டை ஏழுநாட்களுக்குப் பூட்டிவைக்கவேண்டும்.
39
ஏழாம்நாளில் அந்த வீட்டைச் சோதனையிடும்படி ஆசாரியன் திரும்பிப் போகவேண்டும். அந்த பூஞ்சணம் சுவர்களில் படர்ந்திருந்தால்,
40
கறைப்படிந்த கற்களைப் பெயர்த்தெடுத்து, பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே எறியும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும்.
41
வீட்டின் உட்புறச் சுவர்கள் முழுவதையும் சுரண்டி எடுத்து, சுரண்டி எடுத்ததை பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொட்டிவிடவேண்டும்.
42
அதன்பின் அவர்கள் பெயர்த்தெடுத்த கற்களுக்குப் பதிலாக வேறே கற்களை வைத்து, வீட்டைப் புதிய சாந்தைக்கொண்டு பூசவேண்டும்.
43
“கற்கள் பெயர்க்கப்பட்டு, வீடு சுரண்டப்பட்டு, பூசப்பட்ட பின்பும் வீட்டில் பூஞ்சணங்கள் திரும்பவும் தோன்றுமானால்,
44
ஆசாரியன் அங்குபோய் அவ்வீட்டைப் பரிசோதனையிட வேண்டும். அந்த பூஞ்சணம் வீட்டிலே படர்ந்திருந்தால், அது அழிவு ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அந்த வீடு அசுத்தமானது.
45
எனவே அது இடிக்கப்பட்டு, அதன் கற்கள், மரங்கள், சாந்துப் பூச்சுகள் யாவும் அகற்றப்பட்டு பட்டணத்திற்கு வெளியே ஒரு அசுத்தமான இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
46
“அந்த வீடு பூட்டிவைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அதற்குள் செல்லும் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
47
அதேபோல் அவ்வீட்டினுள் நித்திரை செய்கிற அல்லது சாப்பிடுகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும்.
48
“வீடு பூசப்பட்டபின், ஆசாரியன் திரும்பவும் அதைப் பரிசோதிக்க வருகிறபோது, அங்கே பூஞ்சணங்கள் படராதிருந்தால், அந்த வீட்டைச் சுத்தமானது என்று அவன் அறிவிக்கவேண்டும். ஏனெனில், பூஞ்சணம் போய்விட்டது.
49
அதன்பின் வீட்டைச் சுத்திகரிப்பதற்கு ஆசாரியன் இரண்டு பறவைகளையும், ஒருசில கேதுரு விறகுகளையும், சிவப்புநூல் கற்றையையும், ஈசோப்புக் குழையையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
50
அந்த பறவைகளில் ஒன்றை மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின் மேலாகக் கொல்லவேண்டும்.
51
பின்பு கேதுரு விறகையும், ஈசோப்புக் குழையையும், சிவப்புநூல் கற்றையையும், உயிரோடிருக்கும் பறவையையும் எடுத்து, கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்திலும், சுத்தமான தண்ணீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
52
இவ்விதமாய், கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தினாலும், சுத்தமான தண்ணீரினாலும், உயிரோடிருக்கும் பறவையினாலும், கேதுரு விறகினாலும், ஈசோப்புக் குழையினாலும், சிவப்புநூல் கற்றையாலும் அவ்வீட்டைச் சுத்திகரிக்கவேண்டும்.
53
பின்பு அவன் உயிரோடிருக்கும் பறவையை பட்டணத்திற்கு வெளியேயுள்ள பரந்த வெளியில் பறக்கவிடவேண்டும். இவ்விதமாய் அவன் அந்த வீட்டிற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அது சுத்தமாகும்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options