Skip to content
புலம்பல் 1:1-7

புலம்பல் 1:1-7

1
ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
2
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
3
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
4
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
5
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
6
சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
7
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options