Skip to content
நியாயாதிபதிகள் 14:12-18

நியாயாதிபதிகள் 14:12-18

12
அப்பொழுது சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்வேன். இந்த விருந்து நடக்கும் ஏழு நாட்களுக்குள்ளே அதன் பதிலை நீங்கள் சொல்லவேண்டும். அப்படி நீங்கள் சொன்னால் நான் உங்களுக்கு முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தருவேன்.
13
அப்படி உங்களால் பதிலைச் சொல்ல முடியாவிட்டால் எனக்கு நீங்கள் முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தரவேண்டும்” என்றான். அப்பொழுது அவர்கள், “நீ உன் விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கிறோம்” என்றார்கள்.
14
அதற்கு சிம்சோன் சொன்னான்: “உண்பவனிடம் இருந்து உண்பதற்கு உணவு வந்தது, வல்லவனிடம் இருந்து இனியது வந்தது.” ஆனால் மூன்று நாட்களாகியும் அதை அவர்களால் விடுவிக்க முடியவில்லை.
15
நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “எங்களைக் கொள்ளையிடுவதற்காகவா இங்கு எங்களை அழைத்தாய்? இப்பொழுது நீ உனது கணவனுடன் அன்பாகப் பேசி, எங்களுக்கு அந்த விடுகதையை விளக்கும்படி இணங்க வை; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும், உன் தகப்பன் வீட்டாரையும் எரித்து சாகடிப்போம்” என்றார்கள்.
16
அப்பொழுது சிம்சோனின் மனைவி, தனது கணவனிடம் சென்று அழுது, “நீர் என்னை வெறுக்கிறீர்; உண்மையாக நீர் என்னில் அன்பு செலுத்தவில்லை. நீர் என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையை சொல்லியிருக்கிறீர். ஆனால் அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லவில்லை” என்றாள். அதற்கு அவன், “நான் என் தகப்பனுக்கும், தாய்க்கும்கூட அதன் விளக்கத்தைச் சொல்லவில்லையே. அப்படியிருக்க ஏன் அதை உனக்குச் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
17
அவள் அந்த விருந்து நடந்த ஏழு நாட்கள் முடியும்வரை அழுதாள். தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததால் கடைசி ஏழாவது நாளிலே அவன் அவளுக்கு விளக்கத்தைச் சொன்னான். அப்பொழுது அவளும் தன் மக்களுக்கு விடுகதையின் விளக்கத்தைப் போய்ச் சொன்னாள்.
18
எனவே ஏழாம்நாள் சூரியன் மறையுமுன் பட்டணத்து மனிதர் வந்து சிம்சோனிடம் சொன்னதாவது: “தேனிலும் இனியது என்ன? சிங்கத்திலும் வலியது என்ன?” சிம்சோன் அவர்களிடம் பதிலளித்துச் சொன்னது: “நீங்கள் எனது இளம் பசுவுடன் உழுதிராவிட்டால் என் விடுகதையை விடுவித்திருக்கமாட்டீர்கள்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options