Skip to content
யோவான் 10:22-39

யோவான் 10:22-39

22
எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது.
23
இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
24
அப்பொழுது யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, “நீர் எவ்வளவு காலத்துக்கு எங்களைச் சந்தேகப்படவைப்பீர்? நீர் கிறிஸ்துவானால் அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள்.
25
அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துப் பேசுகின்றன.
26
ஆனால், நீங்கள் என்னுடைய ஆடுகளாய் இராதபடியால், விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
27
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன.
28
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.
29
அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது.
30
நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.
31
அப்பொழுது யூதத்தலைவர்கள் இயேசுவின்மேல் எறியும்படி மீண்டும் கற்களை எடுத்துக்கொண்டார்கள்.
32
ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவினிடத்தில் இருந்து பல நற்கிரியைகளை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதினிமித்தம் நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார்.
33
அதற்கு யூதர்கள், “நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறியவில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறாயே. அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள்.
34
“உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? என இயேசு அவர்களிடம் கேட்டார்.
35
இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை அவர், ‘கடவுள்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே. வேதவசனமும் தவறாக இருக்கமுடியாதே.
36
அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னை, ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்?
37
நான் என் பிதாவுக்குரியவற்றைச் செய்யாவிட்டால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்.
38
ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் கூட கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அப்பொழுது பிதா என்னில் இருக்கிறார் என்பதையும், நான் பிதாவில் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார்.
39
எனவே அவர்கள் மீண்டும் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிப்போய்விட்டார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options