Skip to content
எரேமியா 36:10-26

எரேமியா 36:10-26

10
செயலாளராகிய சாப்பானின் மகன் கெமரியாவின் அறை, யெகோவாவின் ஆலயத்தின் மேல்முற்றத்தில் உள்ள வாசலின் உட்செல்லும் வழியில் இருந்தது. பாரூக் அங்கிருந்து புத்தகச்சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை ஆலயத்திலிருந்த மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான்.
11
சாப்பானின் மகனான கெமரியாவின் மகன் மிகாயா, புத்தகத்திலிருந்து வாசித்த யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டான்.
12
அப்போது அவன் அரண்மனையின் எல்லா அதிகாரிகளும் இருந்த செயலாளருடைய அறைக்குள் போனான். அங்கே செயலாளராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்நாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் சிதேக்கியா மற்றும் எல்லா அதிகாரிகளும் இருந்தார்கள்.
13
பாரூக் புத்தகத்திலிருந்து மக்களுக்கு வாசித்த வார்த்தைகளைக் கேட்ட மிகாயா அவர்களுக்கு எல்லாவற்றையும் சொன்னான்.
14
அதன்பின் எல்லா அதிகாரிகளும் கூஷியின் மகனான செலேமியாவின் பேரனும், நெத்தனியாவின் மகனுமான யெகுதியை பாரூக்கிடம் அனுப்பி, “நீ மக்களுக்கு வாசித்துக் காட்டிய புத்தகச்சுருளை இங்கே கொண்டுவா” என்று சொல்லும்படி கூறினார்கள். ஆகவே நேரியாவின் மகனான பாரூக், புத்தகச்சுருளைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனான்.
15
அவர்கள் அவனிடம், “தயவுசெய்து உட்கார்ந்து எங்களுக்கு அதை வாசி” என்றார்கள். அப்படியே பாரூக் அவர்களுக்கு அதை வாசித்தான்.
16
அவர்கள் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டபோது பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்து, பாரூக்கிடம், “நாங்கள் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் அரசனிடம் அறிவிக்கவேண்டும்” என்றார்கள்.
17
பின்பு அவர்கள் பாரூக்கிடம், “இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும் எவ்வாறு நீ எழுத நேர்ந்தது? இதை எரேமியா சொல்லச்சொல்ல நீ எழுதினாயா? எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
18
அப்பொழுது பாரூக், “ஆம் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் எரேமியா சொல்லச்சொல்ல நானே புத்தகச்சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னான்.
19
அதற்கு அதிகாரிகள் பாரூக்கிடம், “நீயும், எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது” என்று சொன்னார்கள்.
20
அவர்கள் செயலாளராகிய எலிசாமாவின் அறையில் புத்தகச்சுருளை வைத்துவிட்டு, அரண்மனை முற்றத்திலிருந்த அரசனிடம் போய் எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
21
அப்பொழுது அரசன் அச்சுருளை எடுக்கும்படி யெகுதியை அனுப்பினான், அவன் செயலாளராகிய எலிசாமாவின் அறையிலிருந்து அதை எடுத்துக்கொண்டுவந்து, அரசனுக்கும் அவனருகில் நின்றுகொண்டிருந்த அதிகாரிகள் எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான்.
22
அது ஒன்பதாம் மாதமாயிருந்தது. அரசன் குளிர்க்கால மாளிகையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன் ஒரு அனல் அடுப்பில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
23
யெகுதி சுருளிலிருந்து இரண்டு மூன்று பத்திகள் வாசித்து முடித்ததும், அரசன் அந்தப் பகுதியை கத்தியினால் வெட்டி நெருப்பிற்குள் எறிந்தான். இவ்வாறு முழுப் புத்தகச்சுருளும் நெருப்பில் எரிக்கப்பட்டது.
24
இவைகளைக் கேட்ட அரசனும் அவனுடைய ஏவலாட்களும் பயப்படவுமில்லை, துக்கத்தால் தங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவுமில்லை.
25
எல்நாத்தானும், தெலாயா மற்றும் கெமரியாவும் அச்சுருளை எரிக்கவேண்டாமென அரசனைக் கெஞ்சிக் கேட்டபோதிலும், அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
26
ஆனால் அரசனோ எழுத்தாளனாகிய பாரூக்கையும், இறைவாக்கினன் எரேமியாவையும் கைதுசெய்யும்படி, அரசனின் மகனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் மகன் செராயாவுக்கும், அப்தெயேலின் மகன் செலேமியாவுக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவர்களை யெகோவா மறைத்து வைத்திருந்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options